ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2016

கடுமையாக ஒருவர் நம்மை ஏசிக் கொண்டிருந்தால் அவரிடம் நாம் சொல்ல வேண்டியது என்ன...?

பிறர் வேதனைப்படுவதைக் கண்டு இரசிக்கக்கூடாது
அரசியலிலோ அல்லது மற்ற மத இனம் என்ற நிலைகளில் இன்று மனிதனுக்கு மனிதன் உதவி செய்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வந்துவிட்டால் செய்த உதவிகளையும் மறக்கச் செய்து தவறுகளைச் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின்படி அவர்கள் உயிர் இயக்குகின்றது.

மற்ற உயிரினங்களிலிருந்து இன்று மனிதனாகப் பிறந்தோம்.

மனிதனான பின் அசுர உணர்வுகள் விளைந்துவிட்டால் மீண்டும் நரகலோகத்திற்குப் போகும் (பாம்பு போன்ற விஷ ஜெந்துக்களாக) உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம். இரக்கமற்று அவர்களுக்குத் தொல்லைகளையும் கொடுக்கலாம். அதே சமயத்தில் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தொல்லைப்படுவதைப் பார்த்து இரசித்துக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால், நாம் எதனை உருவாக்கினோமோ இந்த உணர்வுகளை நுகர நுகர நுகர அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக இங்கே விளையும்.

பின் நமக்குள் அது நோயாக விளையும்போது மனிதனல்லாத உருவாக உருவாக்கும் விஷத் தன்மை கொண்ட நிலைக்கு வந்துவிடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…,” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி இரசித்தோம் எடுத்தால் அது அடுத்து பாம்பினமாக எப்படி உருப் பெறச் செய்கிறது? அந்த அணுக்களின் மாற்றங்களும் அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது? இந்த உடல் எப்படி நலிகின்றது? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது? என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

“அவன் செய்தான்.., அதற்குண்டான தண்டனையை அனுபவிக்கின்றான்..,” என்று நாம் ஏதோ சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால், அப்படி நினைக்கவே கூடாது.

அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?

அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும். அவர் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஏசிப் பேசுபவர்கள் உண்மையை உணரட்டும்
அவன் நம்மை அதிகமாகத் தாக்கிப் பேச வேண்டும் என்றும், நமக்குத் தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டால் அதை நம்மால் தாங்க முடியாது.

அப்பொழுது கோபமும் கொதித்தெழும் உணர்வுகளும் கொண்டு “அவனைத் தாக்க வேண்டும்.., அழித்துவிட வேண்டும்..,” என்ற உணர்வே நமக்குள் தோன்றும்.

நாம் கோபப்படுகின்றோம். ஆனால், தவறு செய்தது அவர்கள். தவறு செய்ததை நாம் நுகர்ந்தறிந்தோம். நம் உயிர் அதை அறியச் செய்கின்றது. அந்த அணுவாகவே மாற்றிவிடுகின்றது.

அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு “நமக்குள் அது உடலுடன் ஒட்டி” அது வினையாக நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

தவறு நாம் செய்யவில்லை.

ஆனால், அவன் நாம் எப்படியும் கெட்டுப் போகவேண்டும் என்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து நமக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் என்றால் அந்த உணர்வை நுகரப்படும் போது அதே உணர்வின் அணுக்களாக உயிர் நமக்குள் உருவாகின்றது.

இப்படி உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கப்படும் போது அந்த உணர்வின் செயலாகவே நம் உடலை இயக்கத் தொடங்கிவிடும்.

சற்று நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்படிக் கடுமையாக ஒருவர் ஏசிப் பேசினார் என்றால் உடனே “ஈஸ்வரா..,” என்று உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சேர்த்துக் கொண்டு அந்தத் தீமையான உணர்வுகள் அணுக்களாக விளையாதபடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அப்பொழுது அவர் சொல்லும் உணர்வும், அதற்குள் இந்த அருள் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் கூடிக் கொண்டே வரும். இதனுடைய நிலைகள் நமக்குள் எடுத்து அவன் அறியாது செய்யும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு மீறியும் அவன் நம்மை வெறுத்துத் தாங்க முடியாத நிலைகளை நமக்குச் செய்தால் “அவன் எதைச் செய்யவேண்டும் என்று எதை நினைக்கின்றானோ, அவனுக்குள் அது விளைந்து அவன் உணரட்டும்…,” என்று மட்டும் சொல்லுங்கள்.

“எனக்கு வேண்டாம்.., நீயே அதை அனுபவித்து நீ உன்னுடைய உணர்வுகளை அறிந்து அதன் வழியாக நீ அனுபவித்துப் பார்..,”

ஏனென்றால் எவர் ஒருவர் அதிகமான நிலைகள் கொண்டு நாம் கெட வேண்டும் நம்மைத் தூஷிக்கின்றனறோ அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்.

“அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…,” என்ற நிலைகளைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.