ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2016

நாம் அனைவரும் சேர்ந்து அருள் சக்திகளை குரு காட்டிய வழியில் பரவச் செய்து கொண்டிருக்கின்றோம்

யாம் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். சாமி நன்றாகச் சொன்னார் என்று சொல்கின்றார்களே தவிர அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல இன்னும் தயாரகவில்லை.

குறைந்த பட்சம் எத்தனையோ வருடம் யாம் பேசியிருக்கின்றோம்.

“சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா..?” இப்படி இந்தப் பேச்சைத்தான் அளக்கின்றோம்.

 ஆனால், நமக்குள் இயங்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று அடிக்கடி சொல்கின்றோம். இப்பொழுது தெளிவாகச் சொல்லி வருகின்றோம். முந்தி உபதேசம் கேட்டவர்களுக்கெல்லாம் (சுமார் 25-30 வருடங்களுக்கு முன்) தெரியும். உபதேசம் எக்ஸ்பிரஸ் மாதிரி திடு திடு என்று ஓடும்.

யாம் உபதேசம் செய்யும் போது அர்த்தம் ஆன மாதிரி இருக்கும். உபதேசம் ரொம்ப அற்புதமாக இருந்தது என்பார்கள். முடிந்த பிறகு இப்படி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்.

கடைசியிலே என்ன ஆகும்? “சாமி உபதேசம் செய்தது உங்களுக்கு ஏதாவது அர்த்தமாகியதா..?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்வார்கள்.

ஏனென்றால், ஆரம்பத்தில் அதி வேகமாக உபதசத்தை வெளிப்படுத்தினேன்.

ஆனால், இப்பொழுது இருப்பவர்களுக்கு ஒவ்வொன்றையும் ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு என்பதை நிறுத்திச் சொல்கின்றேன், விளக்கமாகக் கொடுக்கின்றேன்.

காரணம் அன்று எடுத்துக் கொண்ட நிலைகள் குருநாதர் கொடுத்த பின்பு இந்த மெய் உணர்வுகளை எடுத்து மீண்டும் இந்த உடலில் வளர்த்து இந்த உணர்வின் உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்கின்றோம்.

புத்தக வடிவிலும், மற்ற நோட்டுகளிலும் நீங்கள் எப்படி எழுதி வைத்துக் கொள்கின்றீர்களோ அதை மாதிரி எடுத்து அந்த அலைகளை வெளியிலே பரப்பி வைத்துக் கொள்கின்றேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவாகும்.

இப்பொழுது யாம் பேசியதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொண்ட பின் குறைவான வேகத்தில் போட்டால் சப்தம் தொண்டை கனமாகத் தெரியும். அதி வேகமாக டேப்பில் ஓடச் செய்தால் “கீச்..,பூச்.., கீச்.., பூச்..,” என்று தான் கேட்கும்.

அதே மாதிரித்தான் முதலில் வேகமாகச் சொல்லப்படும் பொழுது “கீச்..,பூச்.., கீச்.., பூச்..,” மாதிரித்தான் இருக்கும். வேகமாக இருக்கும், அர்த்தம் புரியாது.

அன்று ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த சக்தியெல்லாம் ஒருவர் கேட்கிறார் என்றால் கேள்வி கேட்கச் சொல்லி உடனே எல்லாவற்றையும் உருவாக்கி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளை அப்படியே வெளியில் பரப்பிக் கொள்வது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்பார்கள். உடனே அதை எடுத்து குருநாதர் எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் எடுத்து நினைவுபடுத்தி அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொள்வேன்.

அப்பொழுது, அந்த அலைகளை இங்கே பரப்பப்படும் பொழுது எதை எதை எல்லாம் உங்களுக்குத் திருப்பிச் சொல்ல வேண்டுமோ இப்பொழுது அதையெல்லாம் இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

முந்திச் சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஆனால், முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது மீண்டும் அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

ஆனால், அதே சமயத்தில் பதிவு செய்ததை உங்களுக்குள் பதிவானதை முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எண்ணும்போது அதை ஓரளவிற்கு இப்பொழுது அர்த்தமாக்கிக் கொண்டு வருகின்றோம்.

அந்தச் சக்திகளையும் பெறக் கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

அதே சமயத்தில் நீங்கள் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் சொல்லப்படும் பொழுதும் அவர்களுக்குள்ளும் பதிவாகின்றது.

பதிவாகிவிட்டால் யாம் பேசிய இந்த உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து அந்தச் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள்.

உதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை அடுத்தவரிடம் சொல்லப்படும் பொழுது பாசத்துடன் கேட்டறிவோம். அந்த மனிதருடன் நாம் பாசத்துடன் பழகினோம். நல்ல மனிதர், இப்பொழுது நோய் வந்து இப்படி அவஸ்தைப்படுகின்றார் என்று சொல்வோம்.

பார்த்து அந்த விவரங்களைக் கேட்டறிந்தபின் அடுத்தடுத்து அடுத்தடுத்து மற்ற நண்பர்களிடத்திலும் இதைச் சொல்லப்படும் பொழுது அவர்களும் அந்த வேதனைப்படும் நிலையும் வருத்தப்படும் வருகின்றது.

அதைப் போல குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து “மறைந்த பொக்கிஷத்தை” மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கிக் கொண்டே வருகின்றோம்.

அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வுகளைக் கூட்டி உயர்ந்த ஞானத்தின் உணர்வலைகளை ஒலி பரப்பு என்று குருநாதர் சொன்னதால் தான் ஆரம்பத்தில் இதை நான் செய்தது.

அது இங்கே பரவியிருப்பதனால் இதை நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு அர்த்தமாக உங்களுக்குள் விளங்கத் தொடங்கும்.

அதை மற்ற நண்பரிடத்தில் சாமி இப்படிச் சொன்னார் என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். ஆனால், இந்த உணர்வுகளை அவர்களும் நுகர நேரும். இப்படிச் சிறுகச் சிறுக இந்த மெய் உணர்வுகள் பரவும்.

ஆன்மீகத்தின் நிலைகளில் அந்த ஞானத்தைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த உபதேசத்தின் உணர்வுகள் இது படும்.

நீங்கள் என்னுடைய உபதேசத்தைப் படிக்கின்றீர்கள். இதை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் பதிந்த பின் யாம் எதையெல்லாம் வெளியிட்டோமோ அதை அவர்கள் நுகர நேருகின்றது.

ஏனென்றால், இந்தப் பதிவு (RECORD) உங்களிடம் பண்ணியிருக்கின்றேன்.

ஒரு டேப்பில் பதிவு செய்த பின் அடுத்தடுத்து அடுத்த டேப்பில் பதிவு செய்யப்படும் பொழுது எப்படி நாம் மாற்றிக் கொண்டே போகின்றோமோ இதைப் போலத் தான் உங்களுக்குள் பதிவான நிலை மற்றவர்களுக்குச் சொல்லப்படும் பொழுது அது பதிவாகின்றது.

அப்படிப் பதிவான நிலையோ அந்த அலைகளை மீண்டும் அவர்கள் நுகர்ந்து அதைப் பெற முடியும்.

ஒரு டேப்பில் பதிவு செய்வது ஜீவனற்றது. ஆனால், யாம் உபதேசம் செய்த நிலைகளை எடுத்துச் சொல்லப்படும் பொழுது “ஓ” என்று ஜீவ அணுவாகி மீண்டும் அதனை வளர்க்கும். வளர்த்துக் கொண்டிருக்கும் நிலைகளாகச் செயல்படும்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காற்று மண்டலத்தில் மெய்ஞானிகள் உணர்வுகள் பரவும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மகரிஷிகளால் வெளிப்பட்ட அந்த மெய்ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடலாம். எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.

இது என் ஒருவனால் முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும். உங்களால் முடியும்.