ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2015

குகைகளில் அடங்கியுள்ள ஆன்மாக்களைக் காட்டினார் குருநாதர்

கடவுளைக் காண வேண்டும், கடவுளைக் காணத் தவமிருக்கப் போகிறேன் என்று இந்த பூமியில் எத்தனையோ பேர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு எங்கொங்கோ அலைந்து எத்தனையோ வழிகளில் முயற்சித்தவர்கள் பலருண்டு.

அதே சமயத்தில் இந்த உடலில் 1000 வருடம் வாழவேண்டும் என்ற நிலையில் சென்றவர்கள் புற நிலையை நுகராது அடங்கலாம்.

இப்படி அடைப்பட்டவர்கள் எத்தனையோ பேர் வள்ளி மலை, திருத்தணி மலை, பழனி மலை, திருப்பதி மலை இங்குள்ள குகைகளிலும், மற்றும் இமயமலைச் சாரலிலும் எத்தனையோ பேர் அடங்கியுள்ளார்கள்.

ஆக, எப்படிப்பட்ட நிலையில் அவர்கள் உள்ளார்கள்? என்று எமது குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார்.

உடல் சிறுத்த நிலையில் ஆனால் உணர்வுகள் ஒளியான நிலையில் வெளியில் செல்ல முடியாமல்
ஓம்… நமசிவாய…, என்று சொல்லிக் கொண்டும்,
ஓம்… நமோ நாராயணா…, என்று சொல்லிக் கொண்டும் உள்ளார்கள்.

குகைக்குள் அடைப்பட்டது போலத் தான் உள்ளார்கள்.

ஆனால், அந்தப் பகுதியில் வீடு, மற்ற ஏதாவது கட்ட வேண்டும் என்ற நிலையில் அந்தப் பாறைகளை இடிததால் அந்த அதிர்வினால் உடலை விட்டு வெளி வரும் ஆன்மா இடித்தவர் உடலுக்குள் புகுந்துவிடுகிறது.

குகைக்குள் அடைப்பட்டிருந்த ஆன்மாவின் நிலைக்கும் உடலுடன் இருக்கும் ஆன்மாவின் நிலைக்கும் ஏற்காத நிலை ஆகும்போது
போர் நிலையாகி விடுகிறது.
அங்கே இருள் சூழும் நிலையே உருவாகிறது.
பிறவியில்லா நிலை அடைய முடியாது.
மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் வர முடியும்.
எந்த ஆண்டவனையும் அடைய முடியாது.

ஆனால், வேகா நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அது அழியாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்ற நிலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பது.

நம் பூமியில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாய் கருவில் பெற்ற சக்தியால் விண்ணின் ஆற்றலை நுகர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்ந்தார்களோ அவர்களும் இன்று அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணையப்பட்டு அதிலே எண்ணிலடங்காதோர் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நான் (ஞானகுரு) அறிந்தேன், உணர்ந்தேன்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் ஆற்றல்களைப் பெற்றேன்.
எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன்.
வளர்த்துக் கொண்ட அந்தச் சக்திகளை
உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கிறேன்.

கணவன் மனைவி நீங்கள் இருவரும் உங்களுக்குள் இதை வளர்த்தால் சொர்க்கம் என்ற நிலையில் நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.