ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2015

எதை ஒட்டுக் கேட்பது போல் கேட்க வேண்டும்...?

அருள் உணர்வுகளை யாம் உபதேசிக்கும் போது நீங்கள் அதை எப்படிக் கேட்க வேண்டும்?

எம்முடைய உபதேசத்தை ஆர்வத்துடன் கேட்டால் உங்கள் கை கால் குடைச்சல், உடல் நோய் அனைத்தும் நீங்கும்.

சிலர் உட்கார முடியாமல் இருப்பார்கள். சாமிகள் உபதேசிக்கின்றார் எப்படி உட்கார்ந்து கேட்பது? என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், ஈர்ப்புடன் கேட்டால் இரண்டு மணி நேரம் ஆனது தெரியாது. எப்படி உட்கார்ந்து தன்னை மறந்து கேட்டோம் என்று ஆச்சரியப்படுவார்கள்.

சிலருக்கு மூச்சுத் திணறல், இருதய சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும். அவர்களும் இந்த உபதேசத்தை ஈர்ப்புடன் உற்றுக் கேட்கும்போது அவர்களுக்குள் இருக்கும் குறைபாடுகளே தெரியாது.
மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுடைய உடலில் உள்ள நோயையே மறந்திருப்பார்கள்.

ஏனென்றால், உபதேசத்தை நீங்கள் கூர்மையாக உற்றுக் கேட்கும்போது அந்த நேரத்தில் உங்களுக்குள் தீமைகள் நுகராது தடைப்படுத்தப்படுகிறது.
அருள்ஞான உணர்வுகள் வளர்கிறது.
அது உங்கள் தீமைகளைக் குறைக்கிறது.
ஆக, அந்த அருள் ஒளியைப் பெற்றால் இருள் என்ற நிலை விலகுகிறது.

அதே சமயத்தில் சிலர் எப்படி எண்ணுவார்கள்?

சாமி எப்பொழுது ஆசீர்வாதம் கொடுப்பார்? எப்பொழுது பிரசாதம் கொடுப்பார்? கொடுத்தால் உடனே வாங்கிக் கொண்டு போய்விடலாம்.

அதை விடுத்து சாமி எதையோ சொல்லுகிறார். எதையோ புரியாத நிலைகளைச் சொல்லி அறுத்தெடுக்கிறார். சொன்னதையே சொல்கிறார் என்று எண்ணினால் உங்களால் அமர்ந்து இதைக் கேட்க முடியாது.

அதற்குப் பதிலாக எழுந்து போகும் உணர்வுகளையே தூண்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் குடிக்கச் செல்லலாமா, பாத்ரூமுக்குச் செல்லலாமா அல்லது வெளியிலே சென்றுவிட்டு வரலாமா என்ற இப்படிப்பட்ட சிந்தனைகள் தான் வரும்.

உடலையும் தொழிலையும் மறந்து விட்டு சாமி சொன்ன அருள் வழிகளை நாம் பெறவேண்டும்
என்ற நிலையில் எவர் உட்கார்ந்திருக்கின்றார்களோ
அவர்களுக்குள் அருள் உணர்வு பதிவாகிறது,
தீமைகளை அகற்றும் சக்தி கிடைக்கிறது.

சாதாரணமாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒட்டுக் கேட்பவர்கள் என்ன செய்வார்கள்?

தன்னைப் பற்றிப் பிறர் என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் தீமையான உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்வார்கள்.

அதைப் பதிவாக்கிய பின் தீமை செய்யும் நிலைக்கே வந்துவிடுவார்கள். ஏனென்றால், அது பதிவான பின் இந்த நிலை ஆகிவிடுகிறது.

இதைப் போல எம்முடைய உபதேசத்தைக் கேட்கும் நீங்கள் உங்கள் உடலிடம்.,  சிறிது நேரம் இரு.., சாமிகள் துருவ நட்சத்திரத்தைப் பற்றிச் சொல்கிறார். அதைச் சிறிது ஒட்டுக் கேட்போம்.

இப்படி ஒட்டுக் கேட்கிற மாதிரி யாம் உபதேசிக்கும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
உங்களுக்குள் இதை ஒட்டிவிட்டால்
தீமை நீக்கும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாறும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.