ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2015

குருநாதர் எம்மைத் தேடி வந்துதான் சக்தியைக் கொடுத்தார் – அதை உங்களைத் தேடி வந்து கொடுக்கிறோம், ஞானகுரு

நன்மைகள் பல செய்யத் துணிவோம். நல்லது செய்வதற்கு நல்ல துணிவு வேண்டும்.

நீங்கள் நல்லதே செய்து கொண்டேயிருந்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

நல்லது செய்யப் போகும்போது எத்தனை தொல்லைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? உதவி மேல் உதவி செய்யப் போகும்பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்? இதற்காக வேண்டி
அந்த நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

நல்லவர்களைக் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி வேண்டுமென்றுதான் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

நன்மைகள் செய்யப் போகும்போது நாம் எப்படி இருக்க வேண்டும்?
அதற்குண்டான மன வலு” வேண்டும்.
இல்லையென்றால் இந்த நன்மைகள் பலன் தராது.

ஆனால், அதற்கு வேண்டிய சக்தி நல்லவருக்கு வேண்டுமா..,? வேண்டாமா..,?

அதற்காகத்தான், யாம் உங்களுக்குப் பல முறை துருவ நட்சத்திரத்தைப் பற்றி
திரும்பத் திரும்பச் சொல்லி
இந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

ஒரு முறை 1954ல் யாம் வேலையின் நிமித்தமாக அகமதாபாத் சென்றிருந்தோம். அங்கேயும் நம் குருநாதர் என்னைத் தேடி வந்தார்.

எப்படி வந்தீர்கள் என்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்றார் குருநாதர். அங்கேயும் எம்மை “டீ”யைக் குடிக்கச் சொன்னார். அப்புறம் என்னென்னமோ சொன்னார்.

நான் அவரிடம் “ஏன் சாமி நீங்கள் அங்கே பழனியில் அல்லவா இருந்தீர்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? என்று கேட்டேன்.

“நான் சும்மாதான் வந்தேன்டா..,” என்றார். பின் சென்றுவிட்டார். ஆக, என்னைத் துரத்திக் கொண்டேதான் குருநாதர் வந்திருக்கின்றார்.

குருநாதர் என்னுடைய குணத்திற்கோ அல்லது என்னுடைய பூர்வ புண்ணியமோ தெரியாது. ஆனால், எம்மைத் தேடி வந்துதான் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தார். நான் உங்களைத் தேடி வந்து இதைச் சொல்கிறேன்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா?

என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்தார். அதே மாதிரி அந்த அருள் சக்திகளை உங்களைத் தேடி வந்து
உங்களுக்கும் கொடுக்கின்றோம்.
உங்கள் தீமைகள் அகல வேண்டும் என்று சொல்கிறோம்.

ஏனென்றால், நன்மைகள் செய்யும் நிலைகளில் எவ்வாறு தீமைகள் வருகிறது? அதிலிருந்து உங்களைக் காக்க அந்தத் துணிவு வேண்டுமா இல்லையா?

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு பேரருள் பேரொளி பெறவேண்டும் என்பதற்குத்தான் அருள் ஞானத்தைக் கொடுக்கிறோம், நல்லதைக் காத்திடும் சக்தியாக துருவ நட்சத்திரத்தைக் காட்டுகிறோம்.

உங்கள் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே, உங்களுக்கு நன்மைகள் செய்யும் அந்தத் துணிவைக் கொடுக்கிறோம். எமது அருளாசிகள்.