ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2015

நம் உயிரை எளிதாக மதித்தல் வேண்டாம்

ஞானிகளின் வழியைக் கண்டுணர்ந்தபின் நம் உயிர் என்ற நிலைகளில் நாம் பயந்து தவறு செய்யப் பயப்பட வேண்டும்.

ஆக நாம் தவறென்ற உணர்வை நுகர்ந்தால், நம் உயிர் அதை உருவாக்கி நமக்குள் அதை வளர்த்து நம்மை அறியச் செய்கின்றது.

நாம் நினைக்கின்றோம் ஒருவருக்கும் தெரியாமல் தப்பு செய்யலாம் என்று. ஆனால், உயிருக்குத் தெரியாமல் தப்பு பண்ண முடியுமா?

அங்கே தெரிந்து தான் நம்மை இயக்குகின்றது. அப்பொழுது அதை ஒரு உணர்வின் அணுவாக மாற்றிவிடுகின்றது.

அவனால் தான் நாம் அறிகின்றோம்.
அவனால் தான் நாம் இயங்குகின்றோம்.
அவனேதான் உருவாக்குகின்றான்.

மீண்டும் நினைவுபடுத்தும்பொழுது அந்தத் தவறு செய்த அணு உன் உடலில் வளரும். உனக்குள் என்ன செய்கின்றது பார். தப்பவே முடியாது. ஆகவே, நாம் தெரியாமல் பார்ப்பதே நமக்குள் வந்து உருவாகிவிடுகின்றது. அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அந்தக் கெட்டது வளர்ந்துவிடும்.

நீ தெரியாமல் இன்று பார்த்தாய். அதை ஏன் துடைக்கவில்லை. இது வந்து, "உன்னை என்ன செய்கின்றது பார்" என்று சொல்லும் இந்த உயிர்.

ஆகவே நாம், நமது உயிரை எளிதாக மதித்தல் வேண்டாம்.

அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்;
தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்;
மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்;
மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை

மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
என் மனைவி/கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் குழந்தைகள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் குடும்பத்திலுள்ள உற்றார் உறவினர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ளவர்கள் நண்பர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து அங்கே பணிபுரிபவர்கள் அனைவரும் எங்களிடம் பொருள் வாங்குபவர்களும், அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
உங்களுக்குள் எல்லோரும் இருக்கின்றார்கள்.
யாரையும் நீங்கள் பிரிந்து வாழவில்லை.

இவ்வாறு செய்தால் இதுதான் ஏகாதசி விரதம். நாம் யாருடைய உணர்வையும் கவர்வதில்லை.

ஆக, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களும் உயிரின் ஈர்ப்பில் - உயிருடன் ஒன்றிய நிலையாக - அவனுடன் அவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைகின்றோம்.

“நேற்றைய செயல்.., இன்றைய மனித உடல்,
இன்றைய செயல்.., நாளைய ஒளி உடலாக”
உயிருடன் நாம் ஒன்ற முடியும்.
ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா