ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2015

இறந்தவர்களின் உயிரான்மாக்களை பேரின்ப நிலை பெறச் செய்தார்கள் ஞானிகள், நாம் நரகத்திற்கு அழைக்கத்தான் பழகியிருக்கிறோம்

பொதுவாக இன்று குடும்பத்தில் உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் என்ன செய்வார்கள்?

நேற்று வரை நன்றாக இருந்தீர்கள்.
நன்றாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள்
எங்களுக்கெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தீர்கள்,
“இன்று இப்படிப் போய்விட்டீர்கள்…, என்று சொல்லி எண்ணி எண்ணி அழுவார்கள்.

அதாவது சொந்தம் அதிகமாக இருந்ததால் இப்படி அழுவார்கள். இப்படிச் செய்தால் அந்த உணர்வின் தன்மை என்ன ஆகும்?

இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டாய், இன்னும் நீ கஷ்டப்படு, என் உடலுக்குள் வந்து என்னையும் கஷ்டப்படுத்து.

ஆக மீண்டும் இந்த நரகத்துக்குத்தான் அழைக்கிறார்கள்.

பாசத்தால் அவர்களை எண்ணி ஏங்கினால் உடலைவிட்டுப் பிரிந்த அந்த ஆன்மா - நாம் உடலுடன் இருப்பதல் நம் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நம் இரத்தத்தில் இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழலத் தொடங்கும்.

சிறிது நாள்களுக்குப் பின் உங்களுக்குக் கை கால குடைச்சல் வரும் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் நோய்களையும் இரத்தத்திலிருக்கும் அந்த ஆன்மா நம் உடலுக்குள் பெருக்கத் தொடங்கும்.

கடைசியில் நாமும் கடுமையான வேதனைப்பட்டுத் தான் உடலை விட்டுப் பிரிய நேரும். இதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால், நமக்கு ஞானிகள் காட்டிய அருள் வழி, அந்த மெய் வழி எது?

நல்ல வழியில் வாழ்ந்து எங்களுக்காக பல துன்பங்களையும் பட்டு எங்களுக்கு  வாழ வழி செய்தீர்கள்.
இனிமேல் நீங்கள் என்றுமே துன்பமே இல்லாத
பேரின்ப பேருவாழ்வு என்ற பேரானந்த நிலை அடைய வேண்டும்.

ஏகாந்த நிலை என்ற உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ள வேண்டும்.

எங்கே?

துருவ நட்சத்திரத்தின் ஈர்பபு வட்டத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களைச் செலுத்த வேண்டும். இதுதான் ஞானிகள் சொன்ன முறை.

யாராவது நாம் இப்படிச் செய்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், இதெல்லாம் மாறி இன்று மந்திரங்களைச் சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைச் செய்து மீண்டும் ஒரு உடல் பெறும் நிலைக்குத்தான் செயல்படுத்துகிறோம்.

இப்படிச் செய்யவில்லை என்றால் தோஷம் என்று சொல்லி ஞானிகள் காட்டிய அந்த மெய் வழிகளையே பெறவிடாதபடி செய்துவிட்டார்கள் அன்று ஆண்ட அரசர்கள்.

இன்றும் நாம் அதையே பிடித்துக் கொண்டு நல்லதை தேடிக் கொண்டேயுள்ளோம். அதைப் பெறும் தகுதியையும் இழந்திருக்கின்றோம்.

நீங்கள் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் எல்லோரும் ஒன்று சேர்த்து காலை துருவ தியானத்தில் அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் விண் செலுத்திப் பழக வேண்டும்.

அவர்களை விண் செலுத்தினால் பரம்பரை நோய் என்ற நிலைகள் நமக்குள் வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மாவும் ஒளியின் சரீரம் பெறுகிறது.

ஒரு 48 நாள்கள் குடும்பத்திலுள்ளோர் வேறு வேறு ஊர்களிலிருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லோரும் அமர்ந்து ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்தினால் நீங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழமுடியும்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வரும் சாப வினைகள் தீய வினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் நாமும் நம் முன்னோர்கள் சென்ற அந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையவேண்டும் என்ற எண்ணமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.

மனிதனுடய கடைசி எல்லை அது தான்.

அதைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.