ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2015

மெய்பொருளைக் காண வியாசகர் காட்டும் மெய் வழி

ஒரு பொருளைக் காணாமல் போட்டால் என்ன செய்கிறோம்? எங்கே வைத்தேனோ..,? என்று தலையைச் சொறிகின்றோம்.

“எங்கே தான் வைத்தனோ..,?” என்று எண்ணினால் சங்கடம் தான் வரும்.

கீழே பார்த்தீர்கள் என்றால் இந்த உணர்வு ஆன்மாவில் இருக்கும். அதை நுகரப்படும்போது நமக்கு என்ன செய்கிறது? அப்பொழுது சங்கடம்தான் வருகிறது.

ஆனால் அதே சமயம், எங்கே வைத்தோம் என்று சிறிது நேரம் நம் சிந்தனையைச் செலுத்தினோம் என்றால்
இந்த ஆன்மாவை விட்டு அகன்று
புற நிலைகளில் நுகரும்.

இந்தச் சிந்தனையின் தன்மை வரப்படும்போது நாம் பொருளை வைத்த உணர்வின் தன்மை அங்கே படர்ந்திருக்கும்.

அந்த உணர்வை நாம் நுகர்வோம். அதை நுகரப்படும்போது பொருளை நாம் இந்த இடத்தில் வைத்தோம் என்று உணர்ச்சி கொண்டு அதை அறியலாம்.

ஆனால், பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியவில்லையே என்று சங்கடமாக எண்ணிணீர்கள் என்றால்
உங்களுக்குள் அந்த உணர்ச்சியே வராது.
உணர்வை அறியவே முடியாது.
தலையைச் சொறிந்து கொண்டே இருப்போம்.

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டால் “என்ன…, எதைத் தேடுகிறீர்கள்” என்பார்.

ஒரு பொருளை வைத்தேன், எங்கே வைத்தேன் என்றே இப்பொழுது தெரியவில்லை என்போம்.

அவரும் நம்மிடம் அங்கே வைத்தீர்கள் என்பார்?

"இங்கே தான்.., வைத்தேன்" என்று வெறுப்பாகத் தான் சொல்ல முடியுமே தவிர தேடும் நிலையை ஞாபகப்படுத்தினாலும் காணோம் என்ற உணர்வே இயக்கும், சிந்திக்கும் திறன் இருக்காது.

பொருளை எங்கே வைத்தீர்கள்? 
வைத்துவிட்டு எங்கிருந்து (எந்த வழியாக) வந்தீர்கள் என்று சிறிது யோசனை செய்து பாருங்கள் என்று சொன்னவுடன் அந்தச் சிந்தனை வரும்.

அங்கே படர்ந்த உணர்வலைகள்
நாம் எடுத்துக் கொண்ட உணர்வும்
கையிலிருந்து போன அந்த இரண்டு உணர்வும் கலந்து
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

அப்பொழுது அந்த உணர்வு வரப்படும்போது அந்த எண்ணங்கள் வரும். ஓஹோ, இந்த இடத்தில் தான் வைத்தேன் என்ற நினைவு வரும். பொருளை எடுத்து விட்டேன் என்று சொல்ல முடியும்.

ஆகவே, இதைத்தான் வியாசகர் கண்ணனைக் காட்டி “அதோ வருகிறான்.., நாரதன்.., ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன். 

அவனிடம் கேட்டால் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை அவன் காட்டுவான் என்று கண்ணன் சொல்வதாகக் காவியப் படைப்புகளாக சாதாரண படிக்காத மக்களுக்கும் புரியும் விதமாக காட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பரவச் செய்கிறது. அதைத்தான் ரிஷியின் மகனாக, நாராயணனின் (நாராயணன் என்றால் சூரியன்) அபிமான புத்திரனாக வியாசகர் காட்டியுள்ளார்.

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகி அகண்ட அண்டத்தில் வரும் எத்தகையை நஞ்சினையும் உணவாக எடுத்து ஒளியின் சுடராக பேரொளியாக மாற்றி என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டுள்ளது.

வாழ்க்கையில் தீமைகள் வரும்போது நம் கண்ணின் நினைவுகள் எங்கே செல்ல வேண்டும்?
எதை எண்ண வேண்டும்?
எதை நுகர வேண்டும்?
தீமையை நீக்கிடும் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்?
என்று துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்க்கும் மார்க்கத்தைக் காட்டினார் வியாசகர்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் பூமியில் தோன்றிய ஞானிகள் அனைவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்துத் தான் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அடைந்த நிலையை அகஸ்தியனைப் போன்ற அருள்ஞானியாக நாம் ஆகும் மார்க்கத்தைத்தான் வியாசகர் இவ்வாறு காட்டியுள்ளார்.