ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2015

துருவப் பகுதியின் வழியாக வரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கப் பழகுங்கள்

உங்களுக்காக நான் (ஞானகுரு) ஜெபமிருந்தால் எல்லாம் சரியாப் போகும் என்றால் எப்படி சரியாகும்.
நான் ஜெபமிருந்தால் நான் நன்றாக இருப்பேன்.
நான் தியானித்தால் எனக்கு நல்லதாகும்.

குடும்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது ஆகவே, எனக்காக நீங்கள் ஜெபமிருங்கள், எனக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சிலர் சொல்வார்கள்.

அதைக் கேட்டு உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன் என்றால்
உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணினால்
நீங்கள் சொன்ன கஷ்டம் எனக்குள் வராதபடி
எனக்குள் நல்லது என்று வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், உங்கள் கஷ்டத்தை மாற்ற நீங்கள் எண்ணினால் தானே நல்லதாகும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அது உங்களுக்குள் உருவாகும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றிய அகஸ்தியன் விஷத்தின் ஆற்றலை அறிந்தவன். தாய் கருவிலேயே அகஸ்தியன் விஷத்தினை வென்றிடும் ஆற்றலைப் பெற்றவன். மற்ற தாவர இனங்களையும் அறிந்தவன்.

பூமிக்கு சக்தி எங்கிருந்து வருகிறது? எதன் வழியாக வருகிறது? விண்வெளியிலிருந்து பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவரும் ஆற்றல்கள் எப்படிப்பட்டது? என்று தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு அறிகின்றான்.

அதனால் தான் துருவன் என்று காரணப் பெயர் அவனுக்கு வந்தது.

சூரியன் விஷத்தை நீக்கி தனக்குள் பாதுகாப்பது போன்று அகஸ்தியன் தான் உற்றுப் பார்க்கும் அனைத்திலும் உள்ள விஷத்தை நீக்கிடும் சக்தியாக அவனுக்குள் விளைந்து அதன் வழி கொண்டு எல்லாவற்றையும் அறிகின்றான்.

தான் அறிந்த நிலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கும் காட்டுகிறான். துருவ பகுதிக்கே தன் மனைவியையும் அழைத்துச் செல்கிறான். இரு உயிரும் ஒன்றி அந்த எல்லையை அடைகின்றார்கள்.
பூமிக்குள் வருவதை ஒளியாக மாற்றுகின்றார்கள்.
துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

துருவப் பகுதியின் வழியாக வரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் அதிகாலையில் எடுக்கப் பழக வேண்டும். ஏனென்றால் அந்த நேரத்தில் அதிகமாக வரும், எடுத்தால் நாம் அங்கே சென்றடையலாம்.
பிறவியில்லா  நிலை அடையலாம்,
அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

நரசிம்மா, தீமைகளை வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை பெற்றவன் கல்கி, அதுதான் துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலம். அதுதான் மனிதனுடைய கடைசி எல்லை.