ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2015

“பிறவியில்லா நிலை” அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தைச் செய்யுங்கள்

நம் தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையில் பிறர்படும் வேதனைகளும், அவர்கள் செய்யும் தவறுகளையும் குறைகளையும் பார்க்க நேருகிறது, கேட்க நேருகிறது, அவைகளை நுகர நேருகிறது.

அப்பொழுது அவை அனைத்தையும் நம் உயிர் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கிவிடுகிறது. முட்டையாகி வெடித்த பின் அணுவாகின்றது.

உதாரணமாக, ஒரு புழுவைக் குளவி கொட்டினால் குளவியின் விஷத் தன்மை புழுவின் உடலுக்குள் பாய்ந்து புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் குளவியின் ரூபம் எடுத்துவிடுகிறது.

இதைப் போல, நாம் நல்ல உடலாக இருந்தாலும் தீமைகள் நம் உடலுக்குள் ஊடுருவி அவை அணுக்களாகிவிட்டால் நோயாக மாறுகிறது. நம் உடல் சுருங்குகிறது.  இதைத் துடைப்பது யார்?

ஏனென்றால், நாம் எதை எண்ணுகிறோமோ அதை ஓம் என்ற பிரணவமாக மாற்றும் சக்தி நம் உயிருக்கு உண்டு. இப்படிப் பல கோடி சரீரங்களில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கியுள்ளது உயிர்.

ஆனாலும், மனிதனான பின் நாம் நுகர்வதை வைத்து (வேதனை, வெறுப்பு, கோபம் ஆத்திரம்) அணுக்களை மாற்றி உடலை நலியச் செய்து மனிதல்லாத நிலை அடையச் செய்துவிடும் நம் உயிர்.

இதிலிருந்து தப்புவதற்குத்தான் இந்தக் காலை துருவ தியானத்தில் சூரியன் வருவதற்கு முன் துருவ நட்சத்திலிருந்து வரும் பேராற்றலைக் கவரச் செய்கிறோம்.

ஒரு ஆக்சிடெண்டைப் பார்த்தாலோ அல்லது பத்திரிக்கையில் படித்தாலோ சிறிது நேரத்திற்கு நம் மனது சோர்வடைகிறது, அந்தச் சம்பவம் நம்மைப் பாதிக்கின்றது.

அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லி உங்களுக்குள் பதிவாக்குகிறோம். நீங்கள் கண்களால் உற்றுப் பார்கிறீர்கள், கருவிழி பதிவாக்குகிறது.

தங்கத்தில் திரவகத்தைக் கலந்தால் செம்பும், பித்தளையும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமடையும்.

அதைப் போல யாம் பதிவாக்கியதை மீண்டும் நீங்கள் எண்ணி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகர்ந்தால் உங்கள் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை மாற்றி ஒளியான அணுக்களாக மாற்றிவிடும்.

ஆனால், இதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்குச் செய்துவிட்டுகஷ்டம் போகவில்லை.., நோய் போகவில்லை..,என்று விட்டுவிட்டால் நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

வாழ்க்கையில் நாம் தேடுகின்ற சொத்து வளர்கிறது, தேய்கிறது.., மீண்டும் வளர்கிறது. அந்தச் சொத்து உங்களுடன் கூட வருகிறதா?

சரி சொத்து தான் வரவில்லை.

இந்த உடலை எவ்வளவோ பாதுகாத்து அழகாக வைத்திருக்கிறோம் என்று எண்ணுகிறோம்.
கடைசியில் இந்த உடல் எப்படிச் சுருங்குகிறது?
இந்த உடல் கூட வருகிறதாசற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

அருள் உணர்வைப் பெருக்கினால் நாம் பிறவியில்லா நிலை அடையலாம் இல்லை என்றால் மறுபடியும் கீழான நிலைகளுக்குத் தான் செல்ல நேரும்.

பிறவியில்லா  நிலை அடைய வேண்டும் என்றால் இதைச் செய்யுங்கள்.