ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2015

இராமன் – எண்ணங்கள் - "இராமலிங்கம்"

விஷ்ணு தனுசு - கல்யாணராமன்
நமக்குள் தீங்கு செய்யும் உணர்வானால் அது சிவ தனுசு. சிவ தனுசு என்றால் நமக்குள்ளும் அந்தத் தீமைகளை உருவாக்கும் மற்றவர்களுக்குள்ளும் அந்தத் தீமைகளை உருவாக்கும்.

ஏனென்றால் சிவ தனுசு என்பது உடலில் விளைந்த உணர்வு.
அது உடலைக் காக்கும் நிலை பெற்றது,
எந்தக் குணமோ அந்தக் குணத்தைப் பாதுகாக்கும் நிலை பெற்றது.

ஆனால், தீமையை வென்றவன் விஷ்ணு தனுசு உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைந்தவன் விஷ்ணு தனுசு. அந்த உணர்வை நாம் எடுத்தால் வேதனைப்படும் உணர்வை அந்தச் சிவ தனுசை நீக்கும்.

தனுசு என்றால் என்ன? காண்டீபம் என்றால் என்ன? என்பதையே நாம் தெரியாமல் இருக்கிறோம். இவைகள் எல்லாம் இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

சீதாவை யார் காப்பது? நல்லவன் காக்க வேண்டும். அதற்காக அங்கே சுயம்வரம் வைக்கிறார்கள்.

எல்லோரும் குறி வைத்துத் தாக்கும் நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். ஆனால், இராமன் தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்துவிடுகிறான். மிகவும் சக்தி வாய்ந்தவன்.

தீமையை நீக்கும் எண்ணத்தைச் சேர்த்துக் கொண்டு சீதாவை அரவணைத்துக் கொள்கிறான். அதுதான் கல்யாணராமா.

தீமை செய்யும் உணர்வை நீக்கி விட்டால் தன்னுடன் இணைந்து வாழும் நிலை வரும் என்றும் மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் என்பதைக் கல்யாணராமனாகக் காட்டுகிறார்கள்.
 
இராமன் – எண்ணங்கள் - இராமலிங்கம்
நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை அனைத்தையும் உங்கள் உயிர் உருவாக்குகிறது, உங்கள் உடலாகிறது, அதே உணர்வு உங்களை இயக்கத் தொடங்குகிறது.

இதைத்தான் எண்ணங்கள் கொண்டு குவித்து சிவலிங்கத்தை வணங்கினார் இராமன் என்று இராமாயணத்தில் காட்டப்பட்டுள்ளது,

அது தான் இராமலிங்கம் என்பது.

நமக்குள் எண்ணங்களால் உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி இந்த லிங்கம் உருவமாகிறது, சீவலிங்கமாக ஆக இராமலிங்கமாக வாழ்கிறது இன்று துருவ நட்சத்திரம்.

அதே போல அதன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள சப்தரிஷி மண்டலமும் எண்ணங்கள் கொண்டு வளர்த்த அதுவும் இன்று இராமலிங்கமாக வாழ்கிறது. அதனால்தான்இராமலிங்கம், இராமலிங்கம் என்பது.

உயிருடன் ஒன்றி
உணர்வுகள் ஒன்றாக்கப்படும் போது
உணர்வு உடலல்லாது
உருவத்தின் உணர்வுகள்
ஒரு உருவத்தின் தன்மையே அடைகின்றது.
ஒளி என்ற உணர்வை அடைகின்றது.

உடலென்ற நிலைகள் உணர்வு கொண்டு உணர்வென்ற நிலைகளில் ஒளி என்ற தன்மை மாற்றி பிறவியில்லா நிலை அடையுங்கள்.

உங்கள் எண்ணங்கள் பேரண்டத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி பெறட்டும்.

எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்