ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2015

ஒரு நொடிக்குள் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுங்கள்

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவத்தின் வழியாக வரும் அந்த உணர்வலைகளை நாம் நுகரப் பழக வேண்டும்.

நம் பூமியின் வடதுருவப்பகுதி வழியாக துருவ நட்சத்திரத்தின் அடர்த்தி வந்து கொண்டே இருக்கின்றது. அந்த அடர்த்தியை நுகரப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரம் கவரும் 27 நட்சத்திரம் வெளிப்படுத்தும் மின்னலின் ஒளிக்கற்றைகளை நீங்கள் நுகர்ந்து தீமையை நீக்கும் ஆற்றலைப் பெறுங்கள்.

27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைமின் கதிர்களை 
துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் கலந்து
கணவன் மனைவி இருவரும் எடுக்க வேண்டும்.

அடிக்கடி இதைச் செய்தால் நல்ல அணுக்களின் வலு கூடி தீமையான அணுக்களின் செயல்கள் தணியும்.

ஆகவே, உங்கள் உயிரான  ஈஸ்வரனிடம் வேண்டுங்கள். உங்கள் புருவ மத்தியின் வழியாகத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடலுக்குள் உள்ளே செல்கிறது.

சிலருக்கு அந்தச் சக்தி உள்ளே புகும் போது, ஆனந்த நிலையாக அங்கே புருவ மத்தியில் குறு குறுப்பும், ஒளியும், நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.

அதே சமயத்தில் சிலருக்கு அங்கே வலியும் இருக்கலாம். 

தீமையான உணர்வுகளைக் கொன்றிடும் அந்த அரும் பெரும் சக்தி உங்கள் உடலிலுள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்துகிறது.

உங்கள் நினைவு துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் சக்திகளைப் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் ஏங்கும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசிக்க நேருகிறது. புருவ மத்தியின் வழியாக இரண்டு கண்களுக்கு மத்தியின் வழியாக உங்கள் உயிரின் வழியாகத் தான் கவருகின்றீர்கள்.

கவர்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் உள்ள அணுக்களில் பெருகுகிறது. உங்கள் இரத்தங்களிலும் உடலிலும் அந்த சக்திகள் இணைவதை உணரலாம் அறியலாம்.

கம்ப்யூடர் மூலம் ஒரு நொடிக்குள்
100 பாஷைகளை மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைக் கொண்டு நாம் ஒரு நொடிக்குள் உணர்வுகளை ஒளியாக மாற்றிட முடியும்.