ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2015

அகஸ்தியன் ஐந்து வயதில் துருவனாகும்போது பெற்ற மகா சக்திகள்

அகஸ்தியன் ஐந்தாவது வயது வரப்படும்போது அவன் தாய் தந்தையர் மடிந்து விடுகின்றார்கள்.

தாயின் வயிற்றில் பிறந்தாலும் அகஸ்தியன் தாய் தந்தையர் நஞ்சினை தன் உடலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டதால் அவர் உடலிலே வளர்ந்த நஞ்சினை அதிகமாகச் சுவாசித்த நல்ல அணுக்கள் மடியத் தொடங்கி விடுகின்றது.

ஏனென்றால் நஞ்சின் தன்மை அதிகமாக நல்ல அணுக்களுக்குள் இணைக்கப்படும்போது அது மடிந்து விடுகின்றது.

ஆனால், அவர்கள் கருவில் வளர்ந்த குழந்தைக்கு 
நஞ்சின் நிலைகளை இணைத்து
நஞ்சினை உணவாக எடுக்கும்
நஞ்சினை தனக்குள் ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக அகஸ்தியனுக்குள் விளைகின்றது.

அப்படிக் கருவிலே விளைந்த அந்த உணர்வுகள்தான் பிறந்த பின் அகஸ்தியன் என்றும், அணுவின் ஆற்றலை அறியும் சக்தி பெற்றவனாகவும், பின் விண்ணுலகத்தை உணர்வின் அறிவாக தனக்குள் அறிந்திடும் உணர்வுகளாகவும் பெறுகின்றான்.

அவனுடய வளர்ச்சியில் வர வர இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தொடரை உணர்கின்றான். வான்வீதியில் வானுலக இயக்கத்தைக் காணுகின்றான்.

வானஇயல் தத்துவத்தை அறிந்து கொள்ளும் சக்தியைத் தன் ஐந்தாவது வயதில் அவன் பெற்று விண்ணிலிருந்து வரும் சக்திகளை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்வதைக் காணுகின்றான்.

இவனுக்குள் தாய்க் கருவில் பெற்ற நஞ்சை அடக்கும் உணர்வுகள் இருப்பதால் துருவப் பகுதியில் நஞ்சு கலந்த அணுக்களாக வருவதை இவன் கண்ணால் பார்க்கின்றான்.

இந்த உணர்வுகளை அவன் நுகர்ந்தாலும் நஞ்சினை அடக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. ஆகவே, துருவன் என்றும் காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

துருவத்தை நுகர்ந்தறிந்து வானஇயல் தத்துவத்தை சொல்லால் வெளிப்படுத்துகின்றான். அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

அந்த சக்திகள் இன்றும் உண்டு.

அதனைப் பெறும் தகுதியாக நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பெற்ற சக்தியை எமக்குள் பதிவு செய்து
அதை உணரும்படியும்
அதை நுகரும்படியும்
அதை எனக்குள் வளர்க்கும்படியும் செய்தார்.

அவ்வாறு அவர் காட்டிய உணர்வின் அந்த அருள் ஞான வித்தை எமக்குள் பதிவாக்கி குரு காட்டிய அருள் நெறி கொண்டு அதன் உணர்வை என்னால் நுகர முடிந்தது.

அன்று துருவனின் தாய் தந்தையர்கள் தனக்குள் பெற்ற அந்த உணர்வின் அலைகளும் துருவனால் வெளிப்பட்ட உணர்வலைகளும் இந்த பூமியில் படர்ந்து பரவியுள்ளது.

குரு காட்டிய அந்த உணர்வின் வித்தால் அதை நுகர்ந்தறிந்து இப்பொழுது உங்களுக்குள் உபதேசிக்கும்போது அந்த ஆற்றல்கள் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுவதை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அதே சமயத்தில், நீங்கள் அந்த உணர்வலைகளை நுகரப்படும்போது அதன் அறிவாக
அன்று துருவன் வெளிப்படுத்திய அணுவின் தன்மை
உங்கள் உடலில் கருவாகி அணுவாக விளையத் தொடங்கும்.

ஆக, அந்த அணு அதன் எதனில் உருவானதோ துருவன் வெளிப்படுத்திய உணர்வலைகளை உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை அடைகின்றது.

அந்த நிலை அடையச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.