ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2014

ஆன்மா என்பதற்கு விளக்கம்

நமது பூமியில் உள்ள காற்று மண்டலத்திற்குள் பலவித செடிகள், மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன. அவ்வாறு பலவிதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும், 
ஒரு வித்து -  தன் இனத்தின் சத்தை,
அதிலிருந்து பிரித்து எடுத்து
செடியாக, மரமாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்றுதான், நமது உடல் பூமிக்குச் சமமானது. உயிரின் இயக்கத்தால் நாம் கவரும் நிலைகள், மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளை உடலில் உள்ள எலும்புக்குள்  ஊழ்வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

(தாவர இனத்திற்குள் பதிந்தால் அதை வித்து என்றும். மனித உடலுக்குள் பதிந்தால் அது வினை என்றும் அறிதல் வேண்டும்)

நம் எலும்புக்குள் எது பதிவாகி இருக்கின்றதோ
அது தன் இனமான உணர்வின் அலைகளை
காற்றிலிருந்து கவர்ந்து,
நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பூமியில் ஒரு விதையினை ஊன்றினால் அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரந்து வளரத் தொடங்கும். அவ்வாறு
அது கவரும் அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால்,
அதன் வாசனையை நாம் அறியமுடியும்.

இதைப் போன்றுதான், நம் உடலான நிலத்திற்குள் நாம் எண்ணிய உணர்வின் சத்தைப் பதிவு செய்துகொண்டால், அதன் இனமான உணர்வலைகள் காற்றிலிருந்து கவரப்பட்டு நம் ஈர்ப்புக்குள் வருகின்றது.

அதாவது, பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் போன்று நம்மைச் சுற்றி அந்த அலைகள் படர்கின்றது. சுமார் 20 அடி சுற்றளவிற்குள் படர்கின்றது. இதைத்தான்  ஆன்மா என்று சொல்கின்றோம்.

ஆன்மாவில் உள்ளதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். சுவாசிக்க முடியும். .

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை உயிர் வழி கவர்ந்து, அதை இழுத்து உயிர் வழியாகச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் படர்கின்றது.

உடலிலிருந்து வெளிப்படும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஆன்மா முழுவதும் படர்ந்தால், ஏற்கனவே ஆன்மாவில் இருக்கும் தீய உணர்வலைகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிவிடுகின்றது.

நம் ஆன்மா சுத்தமடைகின்றது. இதுதான் ஆத்ம சுத்தி.

ஆன்மா நலம் ஆனால், எண்ணம் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், சொல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், செயல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், உடல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், உயிரான்மா நலமாகும் 
ஆத்மசுத்தி செய்வோமானால், ஆன்மா நலமாகும்.

அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் இந்த பூமி முழுவதும் படரவேண்டும் என்று எண்ணினால், இந்தப் பரமாத்மாவும் பரிசுத்தமடைகின்றது