ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2014

இந்த மூன்று நிலைகளில் இருப்பதுதான் "கடவுள்" - ஞானகுரு

1. எது கடவுள்?
வெப்பம், காந்தம், விஷம் இந்த மூன்றும் அலைகளாகப் படர்ந்து வரப்படும் பொழுது, உதாரணமாக ஒரு ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் மணத்தைத் துரிதப்படுத்தி அந்த உணர்வுகளை ஊட்டும்.

விஷம் தாக்கினாலே வெப்பமாகும். ஆக, தூங்கிக் கொண்டிருக்கும் நிலைகளில் தானாகவே வெப்பம் உருவாகின்றது. பின், அதனை இரண்டற இயக்கி
அதனுடைய மணத்தை வீசச் செய்யும்.
ஆக, இந்த வெப்பம், காந்தம், விஷம்
மூன்றும் சேர்ந்துதான் கடவுள்.
அதாவது உள் நின்று இயக்குகின்றது என்று பொருள்.

உணர்வின் ஆற்றலை அறிந்து, தமக்குள் விளைந்த தீமைகளை அகற்றி நல் ஆற்றலைத் தமக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்தான் மகரிஷிகள்.

தை நமது நினைவில் கொண்டு பதிவு செய்துகொண்டால்தான், அந்த அருள்ஞானிகளின் உணர்வை நாம் மீண்டும் கவர்வதற்கு சீராக இருக்கும்.

அவர்கள் மிகக் கொடிய தீமைகளையும் அகற்றிப் பழகியவர்கள். அந்த சக்திவாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது நமக்குள் சென்று கடவுளாக நின்று தீமைகளை அகற்றுகின்றது.

ஆக, மகரிஷிகளின் அருள் உணர்வுகளும் கடவுள்தான்.
2. கடவுள் (வெப்பம், காந்தம், விஷம்) எப்படி இயக்குகின்றான்?
இதைப் போன்றுதான், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பிறரால் கொடுமைப்படுத்தப்பட்டு வேதனை அடையும் பொழுது அவனிடமிருந்து வேதனையான உணர்வுகள் வெளிப்படுகின்றது.

அவ்வாறு வெளிப்படும் வேதனையான உணர்வுகளை இந்த மூன்று நிலை கொண்ட அதாவது  வெப்பம், காந்தம், விஷம் என்ற இந்த அலைகள்தான் கவர்கின்றன.

இம்சை செய்பவரின் சொற்களைக் கேட்கும் பொழுது அதற்கு நமது உயிர் ஜீவன் கொடுத்து நம்மை இயங்க வைக்கின்றது.

பின், அந்த உணர்வுகள் உள்ளே சென்றபின்
எனக்கு இம்சையாக இருக்கின்றதே,
என்னால் தாங்க முடியவிலையே,
எங்காவது விழுந்து இறந்தால் தேவலாம் போல் இருகின்றதே என்று
இறந்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டும் இதுவும் கடவுள்தான்

இந்த உணர்வுகளையும் வெப்பம், காந்தம், விஷம் என்ற மூன்று நிலைகள் கொண்ட இந்த அலைகள் கவர்ந்து படரச் செய்கின்றது.

உதாரணமாக, பாம்பு மற்றொன்றின் மீது நஞ்சினைப் பாய்ச்சி விழுங்கினால்தான் ஜீரணிக்க முடியும். நஞ்சினைப் பாய்ச்சும் அதன் உறுப்பை அகற்றிவிட்டால் அதன் பிறகு எதனை விழுங்கினாலும், அதனை ஜீரணிக்கும் தன்மையை இழந்துவிடுகின்றது.

ஏனென்றால், நஞ்சு அதற்குத் தேவை. அதே போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றும் தேவைதான்.

ஆகவே, கடவுள் எந்த ரூபத்தில் இருக்கின்றார் என்றால் அது இந்த மூன்று நிலைகள்தான். அதாவது வெப்பம், காந்தம், விஷம்.
இந்த விஷம் இல்லையென்றால்
இந்த வெப்பமும் உருவாகாது.
தான் கவர்ந்து கொண்ட சக்தியின் மணத்தையும் வீசச் செய்யாது.

இந்த மூன்றும், நான்காவதாக மணமும் சேர்ந்தால்தான் எந்த இனம் தன் இனமோ அதனுடன் சேர்ந்து ஜீவன் பெறப்படும் பொழுது
வளர்த்திடும் நிலையாகவும்
உணர்வு ஆற்றலின் எதிர்க்கும் நிலையாகவும்
அதற்குக் கிடைக்கின்றது.
கடவுள் இப்படித்தான் நமக்குள் இயக்குகின்றான்.

இந்தக் கடவுளைப் பற்றி அறியாது கோவிலில்தான் கடவுள் இருக்கிறார் என்று அங்கே சென்று நாம் யாகங்களைச் செய்து, அதை மெச்சி எனக்கு அந்தக் கடவுள் செய்வான் என்று எண்ணினால் ஆறறிவு கொண்ட நமக்கு அது உகந்ததல்ல.
3. நிலைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நாம் இணைய வேண்டும்
எனவே, நாம் நம் உயிரான கடவுளை அறிந்து மெய்ஞானிகள் காண்பித்தருளிய உணர்வின் ஆற்றலை வளர்த்து, எத்தகைய நஞ்சினையும் ஒடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆகவே, மகரிஷிகளின் அருள் சக்தியினை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் உணர்வலைகளுடன் நீங்கள் கலந்துவிடுங்கள்.

என்றும் நிலைத்த ஒளிச்சரீரமாக
வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்
அந்த மகரிஷிகளுடன் இணைய வேண்டும்
என்ற ஏக்கத்தினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஏக்கத்தினால் நீங்கள் எடுக்கும் சுவாசம் உங்களுக்கு நல்ல சுவாசமாக அமைந்து, பெருவீடு பெருநிலை எனும் நிலையை நீங்கள் அனைவரும் பெறுவதற்கு எமது ஆசீர்வாதங்கள்.