ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2014

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று உயிரின் துடிப்பைக் கூட்டி தீமைகளை நீக்க வேண்டும்

1. உயிரின் துடிப்பைக் கூட்டி தீமைகளை நீக்க வேண்டும்
நமக்கு கஷ்டகாலமாக இருந்தால், கோவிலுக்குப் போய் ஐந்து ரூபாய் கொடுத்து அர்ச்சனை செய்துவிட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று சந்தோப்படுகிறோம்.

பணம் கொடுத்தால், அர்ச்சகர் முதலில் கூப்பிட்டு விபூதி கொடுப்பார். கொடுக்கவில்லை என்றால் தட்டே இந்தப் பக்கம் திரும்பாது. ஆக
ஆண்டவனுக்கு காசு கொடுத்தால்தான்,
அவனுடைய வாக்கு இங்கே வரும்.
அந்த நிமிடத்தில் உங்களை ஆள்பவன் யார்?
உங்கள் உயிர் தான்.

இப்பொழுது உதாரணமாக, ஒரு குழந்தை கீழே விழுந்து, அவஸ்தைப் பட்டுத் துன்பப்படுகின்றது. அடுத்த நிமிடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?.

"ஓம் ஈஸ்வரா குருதேவா" என்று உங்கள் உயிரை நினையுங்கள். உங்களை ஆள்பவன் அவனாக இருக்கிறான்.

ஓம் என்று சுவாசிக்கும்போது, காந்தம் அதிகமாகின்றது.
உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
ஈஸ்வரா என்று உயிரை புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
என்று எண்ணி ஏங்கி அந்த சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால், குழந்தை கீழே விழுந்துவிட்டது. இந்த எண்ணம் வந்துவிட்டது. மகரிஷிகளின் சக்தியை நீங்கள் எடுக்கிறீர்கள். எடுத்து, ஈஸ்வரா.., மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று உயிர் வழியாக சுவாசிக்கிறீர்கள்.

அப்பொழுது, நம் உயிரான ஈசனுக்கு என்ன கின்றது?

அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி
அந்த உணர்வை எடுத்தார்களோ, அங்கு பட்டவுடன்
ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சியாகின்றது.
2. நாம் சுவாசிக்கும் உணர்வின் சக்திதான் நம்மை இயக்குகின்றது
ஆனால், நீங்கள் இந்தக் குழந்தை மேல் பாசம் கொண்டு, இப்படி விழுந்துவிட்டானே, என்ற வேதனையை நுகர்ந்து, அந்த வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது ஈசனுக்கு வேதனையாகிறது.

இந்த உணர்வின் தன்மை அங்கு பட்டவுடன், உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி விடுகின்றது. உடலான சிவம் என்ன செய்கின்றது? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது.

நீங்கள் ஆடவில்லை என்றாலும் சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை கால் எல்லாம் ஆடும். உடல் சிவம். சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, வாசுகி நீ சுவாசித்த உணர்வின் சக்தியே, அது உனக்குள் சக்தியாக இருந்து, ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் படித்திருக்கின்றோம்?
அதை யாரும் படிப்பதில்லை. தெரிந்து கொள்வதுமில்லை.

ஆகையினால், நாம் ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து
எப்பொழுதெல்லாம் நமக்கு கஷ்டம் வருகின்றதோ,
அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து,
உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
உள்முகமாக அந்த சக்தியைப் பாய்ச்சி,
சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

பின், நாம் சுவாசித்த அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை 
வேதனைப்பட்டவர்களுக்கும் “பாய்ச்சி” 
அவர்களையும் வேதனையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
இது உங்களால் முடியும், எமது அருளாசிகள்.