ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2014

கடவுளின் அவதாரம் - பலராமன்

எட்டாவது அவதாரம் - பலராமன்
பலராமன் அவதாரம் கடவுளின் அவதாரத்தில் எட்டாவது அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
1. பலருடைய எண்ணங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் பலராமன்
பலருடைய எண்ணங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு உண்டு. மனிதர் ஒன்றைத் தெளிந்து, தெரிந்து, ஒவ்வொரு குணத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பலராமன் என்று ஞானிகள் பெயரிட்டனர்.

நாம் பலருடைய எண்ங்களைக் கவர்ந்தாலும், அவர்கள் உடலில் விளைந்த தீமையான செயல்களையும் தீமையான உணர்வுகளையும் நமக்குள் நுகரப்படும் பொழுது, வாலி என்ற நிலைகள் நமக்குள் உருவாகி, நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை அடக்கும் நிலை வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு நாம் மீளவேண்டும் என்பதற்காக இதை உணர்த்தி, உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம். மது குருநாதர், எவ்வாறு எம்மிடத்தில் பதிவாக்கினாரோ அதைப் போன்று, உங்களிடத்தில் பதிவின் நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.

யாம் பதிவாக்கும் உணர்வுகளை, நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது, வாழ்கையில் வரும் தீமைகளைப் பிளந்து, உங்களுக்குள் நல் உணர்வின் தன்மையைப் பெறமுடியும்.

ஏனென்றால், உலகில் வரும் தீமைகள் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் உருவாவதினால், பலராமன், பல எண்ணங்களையும் அறியும் தன்மை வருகின்றது.

பல எண்ணங்களினால் வரும் வலிமையான நிலைகளை அடக்கும் நிலை பெற்றவர்தான் நரசிம்மா.
2. அரசர்கள் வளர்த்த மந்திர நிலைகளில் நாம் சிக்கவே கூடாது
அன்று ஆண்ட அரசர்கள், மக்களிடத்தில் தங்களுடைய ஆட்சி அதிகாரங்களைச் செலுத்துவதற்காக, மக்களிடையே மதம், இனம், எனும் வேறுபாடுகளை உருவாக்கினார்கள்.
அபிஷேகம் ஆராதனைகளைச் செய்தால்,
கடவுள் எல்லாம் செய்வார் என்றும் மக்களிடையே பரப்பினார்கள்.

எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், எதிரிகளை ஒழிக்கவும் மந்திரங்களைச் செய்தனர். தங்களுடைய ஆட்சி வலுவைக் கூட்டிக் கொள்ள, மந்திரங்களை, பக்தி என்ற நிலையில் மக்களிடையே பரப்பினார்கள். அந்நிலை கொண்டு அரசர்களால் உருவாக்கப்பட்டதுதான், வாமன அவதாரம்.

அரசனால், மந்திர ஒலிகள் கொண்டு உருவாக்கப்பட்ட நிலைக்குத்தான், வாமன அவதாரம் என்று பெயர். அதில் பிராமணனைப் போட்டு, பூணூலையும் போட்டு குடையும் வைத்திருப்பார்கள்.
ஆக, இவையெல்லாம் மந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள். சிருஷ்டிக்க வல்லவன் என்று இன்று வேதங்களை ஓதி உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால், அவர்கள் சொன்னது நமக்குள் உருப்பெறுகின்றது.

நாம் அதை நமக்குள் பதிவாக்கிக் கொண்டு இறந்தபின், அவர்கள் அதே மந்திரத்தைச் சொல்லி நமது உணர்வின் தன்மையைக் கைவல்யப்படுத்திக் கொள்கிறார்கள். அரசனுக்கு அவனுடைய நாட்டுக்குத் தீமைகள் என்றால், கைவல்யம் செய்த உணர்வுகளை ஏவல் செய்து கொள்கின்றார்கள்.

அரசன் உருவாக்கி வளர்த்த தெய்வீக வலை கொண்டு, அரசனுடன் இணைந்து குலதெய்வம் என்று உருவாக்கி, அதன் வழிகளில்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.

அரன் வகுத்த வழியில், நாம் பக்தி கொண்டு, மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தோம் என்றால்,
உடலைவிட்டு ஆத்மா சென்பின்,
அதை மற்றொருவன் கைவல்யப்படுத்திக் கொள்கிறான்.

இது போன்ற நிலைதான் உலகம் முழுவதும் இன்று உள்ளது. மந்திர நிலைகொண்டு, உருவாக்கப்பட்ட பக்தி மார்க்கம் அனைத்தும், மனிரிடம் பேருண்மையின் தன்மையை மறைத்து, அவர்களது உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.

எதை நாம் பெறவேண்டும்?
எதை நாம் நீக்க வேண்டும்? என்பதை மறந்து,
எல்லாம் கடவுள் செய்யும் என்ற நிலைகளில்
அபிஷேகம், ஆராதனை போன்ற
சாங்கிய சாஸ்திரங்களைத்தான் நாம் செய்து கொண்டுள்ளோம்.

ஞானிகள் மனிதருக்கு வகுத்துக் கொடுத்த பாதைகள் வேறு. 

ஆனால், அரசர்கள் ஞானிகள் கொடுத்ததை எடுத்து, அதைப் பிரித்து மனிதரை அடிமைப்படுத்த உருவாக்கிவிட்ட வழிமுறைகள வேறு.
3. நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் தான் “நமக்குச் சொத்து”
எனவே, நாம் அரசர்கள் உருவாக்கி வளர்த்த மந்திர நிலைகளில் சிக்காமல்,
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த
அருள் வழி கொண்டு,
உடல், பொன், பொருள், நமக்குச் சதம் இல்லை.
“உயிர் ஒன்றே நமக்குச் சொந்தம்”,
நாம் நுகரும் அருள் உணர்வுகளே நமக்குச் சொத்து”
என்ற உண்மையினை அறிந்து, குரு காண்பிக்கும் வழியில் செயல்படுவோம். எமது அருளாசிகள்.