ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2014

நல்லவர் கெட்டவராக ஆவதன் காரணம் என்ன...?

1. அசுத்தமானவற்றை அப்புறப்படுத்தும்போது அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது
நாம் நல்ல சுத்தமான கையைக் கொண்டு, அசுத்தமானப் பொருளை அப்புறப்படுத்துகின்றோம். அப்படி அப்புறப்படுத்தும்போது கையிலே அந்த அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது. கையில் ஒட்டிக்கொண்டதைத் துடைக்க வேண்டுமல்லவா?

சுத்தப்படுத்தாமல் அந்த அசுத்தமான கையுடனே,
உணவை உட்கொண்டால் என்னவாகும்?
நல்ல பொருளும் அசுத்தமாகும். சுவையும் கெடும்.

இதைப்போலத்தான், இந்த வாழ்க்கையில் யாருக்கு எந்த நன்மை செய்தாலும், தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும், அந்த அசுத்தத்தை நீக்க, அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து, இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை மறவாது செய்து பழக வேண்டும்.

பிறர் கஷ்டங்களோ, துன்பங்களோ, தவறுகளோ இதைப் பார்க்கப்படும்போது அறிகின்றோம். அடுத்த நிமிடம் அது நமக்குள் ஜீவனாக வளரக்கூடாது.

நம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போதுதான், அதன் முகப்புகளிலே இது வட்டமிடத் தொடங்குகின்றது.
ஆக இந்த உணர்வைக் கவரும்போது,
தீமைகளைக் கவர்ந்துதான்
அதைச் செயல்படும் தன்மை வரும்.
இது உள்நின்று, அந்த அணுக்கள் வளர்ச்சி தன்மை வரும்.

இது உள்நின்று அந்த அணுக்கள் வளர்ச்சியாகிவிட்டால், அந்தத் தீமையின் அணுவாகவே அது மாறிவிடும். ஆக, நல்ல அணுவாக இருந்து தீமையின் அணுவாகிவிட்டால், தனக்குள் இதனின் தன்மை நோயாக உருப்பெற்று விடுகின்றது. இதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒருவர் உங்களைத் திட்டிவிட்டால், அதைப் பதிவாக்கிவிட்டால், பகைமையாகி அவர்களை எண்ணும்போதெல்லாம் பகைமை உணர்ச்சிகள் நமக்குள் தூண்டும். ஆக, அவரைப் பற்றி தவறின் நிலைகளுக்கு இழுத்து வந்துவிடும்.

பின், நாம் திரும்பிப் பார்த்தால் “இப்படி நினைத்தேன், இப்படி வந்துவிட்டது” என்போம். தவறு செய்தவனின் உணர்வு வரப்படும்போது, நாமும் இங்கே தவறு செய்யும் நிலையே வந்துவிடுகின்றது.

நாம் செய்யும் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, ”ஐந்தாறு பார்த்தாய் போய்யா, என்பார்கள்”. தவறு செய்தவர்களிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள். உடனே கோபப்படுவார்கள்.

கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்று சொன்னால், “எனக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டான் போய்யா” என்றுதான் சொல்வோம். இந்த வேகம், சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்தவிடாது,

அப்பொழுது, அதைச் சொல்கிறார் என்ற நிலையில், தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தபின், “ஈஸ்வரா” என்று அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து, இதைச் சுத்தப்படுத்தும் அந்த அருள்ஞானத்தை நாம் பெற்றோமென்றால், தீமைகளைத் தடுக்கும். நம் சிந்தனையைச் சீராக்கும்.
2. நல்ல அணுக்களின் முகப்பில் அருள்ஞான உணர்வுகளை இணைத்து சுத்தப்படுத்த வேண்டும்
இல்லையென்றால்,
நல்ல அணுவின் முகப்பில் வரப்படும்போது,
உணர்வின் அறிவாக ஊட்டும் “அதை” மறைத்துவிடும்.
நம்முடைய நினைவாற்றலும் மறைந்துவிடும், மறந்துவிடும்
தவறின் நிலைகளை நமக்குள் வளர்த்துவிடும்.

தவறான அணுக்கள் வளர்ந்துவிட்டால், பின் நோயாக உருவாகும். சிந்தனை குறையும். உடலில், அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டி, தசைகளைக் குறைக்கும்.

இதை எதற்கு உங்களுக்குச் சொல்கிறோம் என்றால், சந்தர்ப்பம் நம்மை எப்படியும் எந்ததெந்த வகையிலும், இது கலந்தபின் நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றும். ஆகவே இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அதற்குத்தான் அடிக்கடி நாம் அருள் மகரிஷியின் உணர்வை நாம் கவர்தல் வேண்டும். அதை நாம் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்ட வேண்டும். நம் உடலுக்குள், அதைப் பரப்புதல் வேண்டும். இது என்றைக்கும் சதா கிடைத்துக் கொண்டே உள்ளது.

அன்று அகஸ்தியன் தம் இளமைப் பருவத்தில்
தான் கற்றுணர்ந்த உணர்வும்,
அண்டத்தைக் கண்டுணர்ந்த உணர்வும்,
அவனிலே விளைந்த நிலைகள்
இன்றும் இங்கே படர்ந்துள்ளது.

அவன் வளர்ச்சியில், வளர்ந்து வந்த நிலைகளில் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி, இருளை நீக்கி ஒளியைக் காணும் நிலைகள் பெற்றான்.

நமக்கு முன் வந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை, எளிதில் நீங்கள் கவர்வதற்குத்தான்”
உங்களுக்குள் இதை உபதேசிப்பதும்,
திரும்பத் திரும்ப அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்குவதும்.

அப்படிச் செய்யும் பொழுது, நீங்கள் மீண்டும் நினைவுகொண்டு அதை நுகர்வதும், நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் நன்மை செய்வதும், நல்ல சந்தர்ப்பமாக உருவாகின்றது. அதற்குத்தான் இதைச் செய்கின்றோம். எமது அருளாசிகள்.