ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2014

கடவுளின் அவதாரம் - கல்கி

பத்தாவது அவதாரம் கல்கி
என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள். மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாக கல்கியைக் காண்பித்துள்ளார்கள்.
1. மனித வாழ்க்கையில் இறுதியானதும், உறுதியானதும் எது?
உயிரின் பரிணாம வளர்ச்சியில்
இறுதியானதும், உறுதியானதுமான
அழியா ஒளிச் சரீர வாழ்வே,
மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும்
என்றுரைத்தார்கள் ஞானிகள்.

சூரியனின் ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்பட்டு, புவியின் ஈர்ப்பில் வந்த உயிரான்மாவிற்கு விண்ணில் ஒளிச் சரீரம் பெறுவதே முழுமையான நிலையாகும்.
விண்ணில் ஒளிச் சரீரம் பெற்ற உயிரான்மா, தம் ஒளியின் தன்மையை நாளும் வளர்த்துக் கொண்டாலும், அது எல்லையில்லாப் பேரண்டத்தில், சிறியதாகவே இருக்கும்.

ஒளியின் சரீரத்திற்கு அழிவே இல்லை. ஆகையால்தான், பெருவீடு பெருநிலை என்ற அழியா ஒளிச்சரீரத்திற்கு “என்றும் பதினாறு” என்று, காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள்.

சப்தரிஷிகள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளைத் தம்முள் கவர்ந்து, தம்முள் நஞ்சினைப் பிளந்து, தீமைகள் தம்முள் வராது தடுத்து, பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதர்களான நாம், நமது ஆறாவது அறிவின் துணைகொண்டு, துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளை நம்முள் கவர்ந்து, நம் உடல் முழுவதும் படரச் செய்து, நமது உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் பரவச் செய்து, அதனின் வலிமை பெற்றபின், வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவாக இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.
2. தீமைகளை அகற்றிடும் சக்தியை கணவனும் மனைவியும் சேர்ந்து பெறவேண்டும்
தீமைகள் விளைந்த நிலையைப் பிளக்க வேண்டுமென்றால், நாம் எப்படி சக்தி பெறவேண்டும் என்பதை நமக்கு ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

கார்த்திகை நட்சத்திரமும், ரேவதி நட்சத்திரமும், சேர்ந்து
ஒரு உயிராக எப்படி உருவானதோ, இதைப் போன்று,
தீமைகளை அகற்றிடும் சக்தியினை
கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பெறவேண்டும்.

அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தம் உடலுக்குள் சேர்த்து, மனைவி தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர் உயர்ந்த நிலை பெறவெண்டும், அவருடைய பார்வை என்றும் என்னைத் தெளிந்த மனமாக்க வேண்டும், மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதுபோன்றே, கணவனும் தன் மனைவி அந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தீமைகளை அகற்றிடும் சக்தியினை, தனித்து ஒருவர் பெறமுடியாது.

நளாயினி, தன் கணவனைக் கூடையில் வைத்து, தன் சிரம் மீது சுமந்தாள் என்ற நிலையாக, மனைவி, தான் குறைகளை எண்ணாது கணவருடைய நிறைவான மனது எனக்கு வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3. இரண்டு நட்சத்திரம் சேர்ந்து உயிர் உருவாவது போன்று கணவன், மனைவி ஒன்றாக வேண்டும்
ஆதியிலே கஸ்தியன் துருவத்தை நுகர்ந்து, அதன் வழியினில் துருவ மகரிஷியாகி, தான்  பெற்ற சக்தியெல்லாம் தன் மனைவி பெறவேண்டும், என்ற உணர்வினை ஊட்டினான்.

அதே உணர்வினை, அவனுடைய மனைவி
தன் கணவனுக்குக் கிடைக்கவேண்டும்,
என்று உணர்வினை வலுபெறச் செய்ததினால்,
எந்தத் தீங்கினையும் உருமாற்றவல்ல சக்தி
அவர்களிடத்தில் உண்டானது.

தீமையை அகற்றிய மகரிஷிகளின் அருளுணர்வுகளை, கணவன், மனைவி இரண்டு பேரும் கவர்ந்து, தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்தமுடியும்.

தீமைகளை அகற்றும் செயலாக்கமாக, கணவன் தனது மனைவி உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று எண்ணுவதும், மனைவி தனது கணவன் பெற வேண்டும் என்று என்ணுவதும்,   ஆக இந்த இரு உணர்வும் வரும்பொழுது ரேவதி நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிரானதைப் போன்று, கணவன், மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மையும் ஒன்றாகின்றது.

உணர்வினை ஒளியாக ஒருவருக்கொருவர் மாற்றப்படும்பொழுது, இருவருக்குள்ளும் வரக்கூடிய இருளினை மாற்றுகின்றது.  இருளை மாய்த்து ஒளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகளின் அருள்சக்தி கணவன்/மனைவி பெறவேண்டும் என்றும்,
அவரின் உணர்வுகள் வலுப்பெற வேண்டும்,
அவர் பேரின்பப்  பெருவாழ்வு வாழ வேண்டும்,
அவருடைய பார்வை எப்பொழுதும்
எனக்குள் நல் ஒளியை உணர்த்த வேண்டும் என்றும்,
இந்த உணர்வை எண்ணும்பொழுது
இந்த உணர்வின் வலுவான நிலைகள் இங்கே கூடி,
வலுவின் தன்மைகள் பெறப்படும்பொழுது,
அவர்கள் பிறருடைய தீமைகளைப் பார்த்தாலும்,
தீமைகள் அவர்களுக்குள் வராது தடுத்து,
கல்கியின் தன்மையினை அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள் சாவித்திரி எனும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைந்து, மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு, மனித உடலை விட்டுச் சென்ற பின்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து,
நுகர்ந்த உணர்வின் தன்மையால் தம்முள் வலிமை கொண்டு,
தம் உணர்வின் தன்மைகளை
ஒளிக்கதிர்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
இதுதான் கல்கி.

உயிர் விண்ணிலே தோன்றியது. உணர்வின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதியது. எதிர்ப்பின் உணர்வு கொண்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.  அதனின் இயக்கத்தால், ஈர்ப்பால் ஆண், பெண் என்ற நிலைகளில் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

இரு உடல்கள் பிரிந்தபின், மனிதனில் இது ஆண், பெண் என்ற நிலைகள் உருவாக்கி, இதில் உருவாக்கும் எண்ணங்களை தனக்குள் சேர்த்து, உணர்வின் ஒளியின் சுடராகப் பெற்றவர்கள்தான் இன்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள், இன்று தம்முள் உருப்பெறும் உணர்வுகளை தம்முள் அணைத்து, வசிஷ்டரும், அருந்ததியும் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தாம் கவர்ந்துகொண்ட சக்தி கொண்டு,
உணர்வின் இருளைப் போக்கி,
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
4. சாகாக்கலை வேண்டாம், வேகாநிலைதான் பெறவேண்டும்
சூரியன் அழியலாம்
உயிரணுவாக ஆனபின் அழிவில்லை.

மனிதனோ அல்லது வேறு எந்த உயிரினமோ நெருப்பில் விழுந்தால், அதனின் உடல் கருகுகின்றது. ஆனால், உயிர் மடிவதில்லை.

குடும்பத்தில் வெறுப்பு கொண்டு ஒருவன் தன்னை எரித்துக் கொண்டால், சாகும் தருவாயில் எந்த நண்பனைப் பற்றுடன் எண்ணுகின்றானோ, அவன் உடலில் இவனது உயிரான்மா புகுந்து கொள்ளும். இங்கே நெருப்பில் எரியும் பொழுது, என்ன எரிச்சல் இருந்ததோ, அதே உணர்வுகள் நண்பனின் உடலில் எரிச்சலாகும்.

இப்படி வெறுப்பின் தன்மை உருவாக்கப்பட்டு, அவனின் வாழ்க்கையைப் பாழாக்கும் நிலைதான் வருமே ஒழிய, உயர்த்தும் நிலைகள் இல்லை

ஆக, இதனின் உணர்வுகள் சாகாக்கலையாக இருந்து அவர்கள் இருவரது உயிரினையும் கீழான பிறவிக்கும் அழைத்துச் செல்கின்றது.

இதனை அறிந்துணர்ந்து கொண்ட நாம் அனைவரும்,
சாகாக்கலை எனும் நிலையிலிருந்து விடுபட்டு,
வேகாக்கலை எனும் மெய்ப்பொருள் தன்மையினை,
துருவ மகரிஷிகளின் உணர்வின் ஒளி அலைகளை
தம்முள் இணைத்துப் பெறுதல் வேண்டும்.

அருள்ஞான நிலைகளை  உங்களிடத்தில் உருவாக்குவதற்காகத்தான், மது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் எமக்குள் பதிவு செய்த அருள்ஞான நெறிப்படி, உணர்வின் நிலை கொண்டு, யாம் அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது, அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை யாம் பெறுகின்றோம். அதனின் உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தி உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

அருள் ஞான நெறிகள், கேட்போர் உணர்வுகளில் ஞான வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகின்றது..

அருள் ஞான நெறிகளில் நினைவினைச் செலுத்தி, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள் என்றால், அருள் ஞான உணர்வை உங்கள் உயிர் அணுவாக மாற்றுகின்றது.  

அருள் ஞான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது மெய்யுணர்வுகள் உங்களுக்குள் பெருகுகின்றது.
தீமையற்ற நிலையாக உயிர் உருவாக்குகின்றது.
பேரானந்தத்தின் தன்மையினை உங்களிடத்தில் உருவாக்குகின்றது.

உங்களுடைய உயிரான்மா என்றும் பதினாறு என்ற மெய்ப்பொருளின் தன்மையைப் பெறும் தகுதியினைப் பெறுகின்றது.

இதனின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து, தம்முள் மெய்ப்பொருளைப் பெறும் தன்மையாக, தமது உணர்வை வளர்த்து வரும் அன்பர்கள்  அனைவரும், என்றும் பேரானந்த பெருவாழ்வைப் பெறுவதற்கு, எமது அருளாசிகள்.