ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2014

12 வருட கால அனுபவ வித்துதான் "ஆத்ம சுத்தி" - ஞானகுரு

1. ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை (வித்து) குருநாதர் கொடுத்த நிலை
நாம் எந்தக் குறைகள் கண்டாலும், உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்துவதற்குத்தான், யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து, அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து, நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால், அவருக்கு பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த அந்த நிலைகள், அந்தத் துன்பங்கள் விளைய வைக்கும் அந்த நிலைகளிலிருந்து மீள்வதற்கு, என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்து, தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது? என்ற நிலையை அறியச் செய்தார்.

மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் கொண்டு
அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது,
ஒரு மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயல்படுகின்றது
என்பதையும் காட்டினார்.

அந்த எண்ணத்தை எடுத்து, அதைப் போன்று மனித உடலில் விளைய வைத்து, ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற நிலையையும் எம்மைப் பெறச் செய்தார்.

அதைப் பெறச் செய்து, எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து, அந்தத் துன்பத்தை நீக்க “நீ எப்படி எடுக்க வேண்டும்” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும், எமக்குள் வரக்கூடிய வியாதியையும், நிவர்த்தி செய்ய முடிந்தது.
2. 12 வருட கால அனுபவத்தில் எமக்குள் விளைய வைத்த மெய்ஞானிகளின் ஆற்றல் தான் "ஆத்ம சுத்தி"
அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து, அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து,
அப்படி வளர்த்துக் கொண்ட
“அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” இப்பொழுது உபதேசிக்கின்றோம்

இந்த உபதேசத்தின் உணர்வை உங்கள் ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் நன்மை தீமைகளை உருவாக்கும் நிலைகளில்
அந்த நன்மையை உருவாக்கும்
உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு,
இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.

அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் சேர்க்கப்பட்டு, உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் உணர்வுகள், உங்களை ஆட்டிப்படைக்கும் இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.
ஆகவே, நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி,
உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை
நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருடகால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது, அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து, திரும்ப உபதேசத்தின் நிலைகள் கொண்டு, உங்களுக்கு வாக்கின் நிலைகள் கொண்டு, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளை, நீங்கள் உங்களுக்குள் அந்த ஞானத்தை அந்த நல்ல சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும், ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.