ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2014

யாம் கொடுக்கும் அருள் ஞானப் பயிரை உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்

1. யாம் கொடுக்கும் அருள்ஞானப் பயிரை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில், “சாமி சொன்ன ஆற்றலின் தன்மையைஉங்களுக்குள் நீங்கள் செய்து பார்த்தால், உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தையும், உங்கள் மனதைக் குலையச் செய்யும் அசுர ஆற்றலினுடைய அசுரத்தன்மையான இந்த உணர்வை நீங்கள் தடைப்படுத்திவிட முடியும்.

இவர் வந்து செய்து கொடுப்பார் என்று எண்ணுவதற்குப் பதில், யாம் கொடுக்கின்றோம், நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு நெல் பயிரை உங்கள் கையிலே கொடுத்தோம் என்றால்,
அதை விளைய வைத்து,
அதிகமாகப் பயிரிட்டுக் கொள்ளலாம்.
பயிரின் நிலைகள் போலத் தான், யாம் கொடுக்கும் நிலை. பலகாரம் அல்ல.

சுட்டுக் கொடுத்தால், அன்றைய நிமிடம் இருக்கும். பின், அதனுடைய கழிவாகிவிடும். மறுபடியும் எம்மைத்தான் எதிர்பார்க்க வேண்டும்.
சமைத்த வித்தின் தன்மை அது பயிர் - ஜீவனுள்ளது.
இது பலகாரம் - ஜீவனற்றது.

வாக்கிலே யாம் சொல்லப்படும் பொழுது, இந்த நிமிடம் அது மறைந்துவிடும். அது அந்த நேரத்திற்கு, உங்களுக்குச் சௌகரியாமாகும்.

ஆக, அடுத்த கணம் இந்த ஜீவனுள்ள சக்தியை நீங்கள் பெறுவதற்கு இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து, மகரிஷிகளினுடைய சக்தி கொண்டு அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
2. கவசத்தைப் போன்று உங்களுக்குக் கொடுக்கின்றோம் – ஆத்ம சுத்தி
இன்றைய நிலைகளில் ஆத்ம சுத்தி செய்து கொண்டால், சமத்துவப்படுத்துவதைக் காணலாம்.

எவ்வளவு எதிரியாக இருந்தாலும்,
மற்ற நிலைகள் இருந்தாலும், அதை நாம் சமப்படுத்தி,
அவர்களைப் பார்த்தவுடன்,
நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டாதிருக்கும்.

அதுதான் முதல் கடமை. மற்றவர்கள் பேசலாம். ஆனால், பேசிய உணர்வுகள் நம்மைத் தூண்டி, “இப்படிச் செய்தார்” என்று ஆத்திரம், சோர்வு, சஞ்சலம், வெறுப்பு, இதைப் போன்ற நிலைகள் வரவே கூடாது.

இந்தச் செயல்களுடைய நிலைகள் வந்தாலும், இதை வராது தடுப்பதற்கு, உடனே ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து கொள்ள வேண்டும்.

அதைச் செய்து, இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் அமிலமாகச் சேர்ந்து, நம் உடலில் சேராவண்ணம் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் அந்த ஆயுதத்தைக் கொடுத்தது.

ஏனென்றால், இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை
“வெறும் சொல்லாக” நீங்கள் எண்ண வேண்டாம்.
இதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் பொழுது,
கவசத்தைப் போன்று
உங்களைக் காத்துக் கொள்ள,
அதை யாம் கொடுக்கின்றோம்.

நமது குருநாதர் எதன் வழிகளில்
எமக்கு அதைக் கவசமாகக் கொடுத்தாரோ,
ஒவ்வொரு நிமிடத்திலும் என்னை அடக்க முடியாத நேரத்தில்,
அந்த ஆற்றல் மிக்க சக்தியைக் கொண்டு அடக்கி,
அந்த உணர்வின் ஆற்றலை, நான் எப்படி
சிறுகச் சிறுக நல்லதாக மாற்றிக் கொண்டேனோ,
அதைப் போன்று, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீங்களே தான் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த நிலை வந்தால்தான், நீங்கள் இந்த உலகத்தின் நிலைகளிலிருந்து மீள முடியும். ஆகையினாலே, இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு வரவேண்டும்.