ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2013

துருவ நட்சத்திரம் என்றால் என்ன என்று, உணரமுடியாத வகையில் செய்துவிட்டனர்.

1. இன்றைய உலக மக்களின் நிலை
இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிழை கொண்டதாக மாற்றிவிட்டனர். இன்று உலகமே, விஞ்ஞான அறிவால் அழியும் நிலை உள்ளது.

இந்த அரசர்கள் காண்பித்த வழி கொண்டுதான் இன்றைய மக்கள் ஆசையின் உணர்வு கொண்டுள்ளார்கள். ஒருவருக்கொருவர் மதம், இனம், மொழி என்று பிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று புசிக்கும் நிலையும், மனித இனமே அழிந்துவிடும் நிலையும் இன்று முழுமை அடைந்துள்ளது.

இந்த பூமியில் விஷத்தன்மைகள் பரவி,
மனிதன் சிந்திக்கும் தன்மை இழந்து,
தீமையின் தன்மை தனக்குள் வந்து
கடும் நோயாகவும், பழி தீர்க்கும் உணர்வாகவும்,
அஞ்சி வாழும் நிலையும்,
அரக்கத்தனமாகக் கொன்று புசிக்கும் நிலையும்
நுகர்ந்த உணர்வுக்கொப்ப செயல்படுவதை,
இப்பொழுது உலகமெங்கிலும் பார்க்கலாம்.

அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகளை, சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து புவியில் படரச் செய்கின்றது.
அதனை மனிதர் கவரும் வழிகளை
மறக்கச் செய்து விட்டனர்.
இன்று வரையிலும் துருவ நட்சத்திரம் என்றால் என்ன என்ற நிலையை, உணரமுடியாத வகையில் செய்துவிட்டனர்.
இதை மகாபாரதத்தில் காட்டுகின்றனர். ஒரு அரசனுக்கு இரண்டு மனைவி. இரண்டாவது மனைவிக்கு ஒரு பச்சிளம் குழந்தை. முதல் மனைவிக்குப் பிறந்தவன் துருவன்.

இரண்டாவது மனைவியின் மடியின்மேல் பச்சிளம் குழந்தை விளையாடும் பொழுது, துருவன் இன்னொரு மடியின்மேல் அமர்வதற்குச் சென்றான்.

அதற்கு அவள், துருவனை “சீ… போடா…” என்று தள்ளிவிட்டாள். அதற்கு அந்த ஐந்து வயது துருவன், ஓடிப் போய் தியானத்தில் அமர்ந்தான். அவன் தான் துருவன் என்று காண்பித்தனர். ஆனால் அதற்குப்பின் துருவன் என்ன ஆனான்? என்ற நிலைகளை அறியமுடியாதபடி செய்துவிட்டனர்.

இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து, இனி பிறவியில்லா நிலைகளை அடைவதற்குப் பதிலாக, மனித உடலில் இச்சை கொண்டு, அரசன் தான் சாகாக்கலையாக உருவாவதற்காக, தான் சத்ரியன் என்ற நிலைக்குள், எதனையும் தனக்குள் அடிமையாக்கினான்.

அப்படி அடிமையாக்கி, அதனை தனது வசப்படுத்தும் நிலையில் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலைகளை அங்கே அவன் வளர்த்தான். அரசன் காட்டிய வழிகளில் யாகங்களையும், பாவங்களையும் செய்து கொண்டிருக்கிறோமே ஒழிய
ஞானிகள் காண்பித்த உணர்வை நாம் நுகரவில்லை.
நுகரச் சொல்லவும் இல்லை.
நுகரும்படி செய்தாலும், கேட்டுணர்வோர் யாரும் இல்லை.
 2. மெய் உலகைப் படைப்போம்
ஆகவே, நாம் இதுபோன்ற தீமைகளை நீக்க வேண்டும் என்றால்,
சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து வரும்
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்  உணர்வலைகளை, நம்முள் கவர்ந்து இணைக்கும் பொழுது, நம்முள் அறியாது வரும் தீமைகளை நீக்குகின்றது. மெய்ப்பொருளைக் காணும் திறனை நம்முள் உருவாக்குகின்றது.

ஆகவே இதன் வழி கொண்டு, துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அலைகளை நம்முள் கவர்ந்து பெருக்குவோம்.
தெய்வ குணத்தை வளர்ப்போம்,
தெய்வ சக்தியைப் பெருக்குவோம்.
மெய் உலகைப் படைப்போம். எமது அருளாசிகள்.