ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2013

நம் உடலுக்குள் எப்படி அணுக்கள் உருவாகின்றது?

1. நமது வாழ்க்கையில் எவ்வாறு ஏமாற்றமடைகின்றோம்?
நாம் நமது காரியத்தைச் சாதிப்பதற்காக மற்றோருவரை அணுகுகின்றோம். ஆனால், அவர் நம்மை ஏமாற்ற முனையும் பொழுது, அவர் நம்மை ஏமாற்ற நினைக்கின்றார் என்று தெரிந்தாலும், நாம் நம்முடைய ஆசையின் நிலைகளால், ஏமாற்றத்தில் சிக்கி விடுகின்றோம்.

ஏனெனில், நம்முடைய காரியங்கள் நல்ல முறையில் அமைந்திட ஏங்குகின்றோம். ஆனால் அது சமயம், அவரிடமிருந்து வெளிப்படும் வித்தியாசமான சொற்களை கவனித்துச் சிந்திப்பதில்லை. ஆகையால் ஏமாற்றுபவர் கையில் சிக்கிவிடுகின்றோம்.

“பெறவேண்டும்” என்ற ஆசையின் நிலைகளில் இருந்தோம். ஆனால், எண்ணியது கிடைக்கவில்லை எண்ணும்பொழுது அவர் மீது வெறுப்பின் தன்மை கொண்டு வெறுப்பின் உணர்வுகளை நாம் சுவாசித்துவிட்டால், திரும்பத் திரும்ப எண்ண வேண்டியது வரும்.
2. சுவாசத்தின் மூலம், நம் உடலுக்குள் எப்படி அணுக்கள் உருவாகின்றது?

“என்னை ஏமாற்றிவிட்டான்,
எனக்கு இந்த நிலையைச் செய்துவிட்டான்”
என்ற இந்த உணர்வுகளை நம்முள் கலக்கப்படும்போது, நமது உணர்வின் அணுக்கருவாக நம்முள் உருவாகிவிடுகின்றது.

“என்னை ஏமாற்றிவிட்டான். எனக்கே இப்படி செய்துவிட்டான்” என்று 48 நாட்கள் எண்ணி, இந்த உணர்வுகளை வளர்த்துவிட்டால் போதும், நாம் சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுவோம்.

அவன் நம்மை ஏமாற்றிய உணர்வுகளை எண்ணி,
அதை நாம் சுவாசிக்கும்பொழுது
நமது இரத்த நாளங்களில்
அணுக்கருவாக, முட்டையாக உருவாகி,
நமது உடல் பாகம் முழுவதும் சுழன்று வருகின்றது.

அதனுடைய காலப்பருவம் 48 நாட்கள் தான். 48 நாட்கள் ஆனபின் அது குஞ்சாக வெளிப்படும் தன்மை வருகின்றது.

உணர்வின் அணுக்கரு நமது இரத்த நாளங்களில் சுழன்று வரப்படும்பொழுது, அந்தக் கருமுட்டை உடலின் எந்த பாகத்தில், ஒட்டிக் கொள்கின்றதோ, அங்கே அணுவாகப் பிறக்கின்றது.
3. உருவாகிய அணு, நமக்குள் எப்படி தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது?
அணுவின் தன்மையாக ஆனபின்,
ஏமாற்றிய உணர்வின் உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவானதால்,
அதே உணர்வை நுகர்ந்து
அதற்கொப்ப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை,
நமது சிறு மூளை பாகத்திற்கு வரும்.

பின், நமது உயிரின் தன்மைக்கு எட்டியபின்
அது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றிற்கு ஆணையிடும்.

ஆனால், ஏற்கனவே இருவரும் உறவாடிய உணர்வின் அலைகள் காற்றில் மிதந்து கொண்டிருப்பதால், இதைக் கவர்ந்து நாம் நுகரப்படும் போது, நாம் யார் மேல் வெறுப்படைந்தோமோ, அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோன்றும்.

வெறுப்படையும் உணர்வின் தன்மை பெற்ற அணுவோ, அதன் உணர்வை உணர்வாக எடுத்து, வளர்ச்சி பெறும் பொழுது அதனுடைய மலம் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளில் பட்டு அந்த உறுப்புகளில் ஒருவிதமான வேதனைகளை ஏற்படுத்தும்.

உள்ளுறுப்புகளில் இனம் புறியாது வேதனைகளை ஏற்படும்பொழுது அதன் வரிசைத் தொடர்கொண்டு மற்ற உறுப்பக்களும் சோர்வடையத் தொடங்கும்.

அப்படி உடல் முழுவதும் சோர்வடையும் தன்மை வரப்படும்போது, நம்முடைய சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது.
சிந்திக்கும் தன்மை குறையும்பொழுது,
எந்தக் காரியத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்று எண்ணினோமோ,
அதை மறுத்து, நமக்குள் சோம்பேறித்தனத்தை
அல்லது சிந்திக்கும் திறன் இழத்தலை உருவாக்கும்.

ஏற்கனவே ஒரு தொழிலே நல்ல முறையில் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்தச் செயலை செயல்படுத்த முடியாதபடி தடைப்படுத்தும்.
4. உருவான அணு தன் இனத்தை எப்படிப் பெருக்குகின்றது?
இதன்வழியில், நாம் எதை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வின் கலவைகள் நமது உடலை இயக்குகின்றது. இதைத்தான், ஞானிகள், சிவன் ஆலயங்களில் நந்தியை வைத்து, நந்தீஸ்வரன் சிவனுக்கு கணக்குப்பிள்ளை என்றார்கள்.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ, அதை
நமது உயிர் ஈசனாக இருந்து இயக்கி
உணர்வின் அணுவாகப் பெருக்கச் செய்கின்றது.

உதாரணமாக, ஒரு செடியின் வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து செடியாக விளைந்து அந்த செடியில் விளையும் பல வித்துகள் மேலும் பல செடிகளை உருவாக்கி,
தன் இனத்தைப் பெருக்குவதைப் போன்று
நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் அணு ஒன்றாக இருப்பினும்
அந்த அணு கருவின் தன்மை அடைந்த பின்
தன் இனத்தினைப் பெருக்கும்
சக்தியினைப் பெற்றுவிடுகின்றது.

இப்படி, அந்த இனம் அதிகரித்துவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டதன் உணர்வின் குணம் எதுவோ, அதைத்தான் மீண்டும் நாம் எடுப்போம்.

அதன் தொடர் கொண்டு, நாம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுவதும் எடுத்த காரியத்தைச் சித்தியாக்கும் வல்லமையும் இழந்து விடுகின்றோம்.

இப்படி நாம் எண்ணிய உணர்வை நமது உயிர் இயக்கி, நம்முடைய காரியங்களுக்குத் தடைவிதிக்கும் தன்மைகள் வந்துவிடுகின்றது. நம்முடைய எண்ணமே நம்மை வலிமையிழக்கச் செய்கின்றது. இதையெல்லாம் நம் வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.