ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2013

மெய் ஞானிகள் கண்டுணரும் வழியை ஈஸ்வரபட்டர் காட்டினார்

நமது குருநாதர் தாம் பெற்ற சக்தியின் துணை கொண்டு, அவர் உபதேசிக்கும் உணர்வுகள் சொல்லாக வந்தாலும், எமக்குள் பதிவானபின், அதனின் உணர்வின் நிலையாக அறியும் பருவத்தை எமக்குள் ஏற்படுத்தினார். உணர்வின் தன்மைகள் கவர்ந்திருப்பதைக் காட்சிகளாகக் காணும்படிச் செய்தார்.

அதாவது, இன்று ஒரு T.V.ஐ ஒரு அலைவரிசையில் வைத்தால், அந்த அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை இங்கே படமாகக் காண்பிக்கின்றது. இதைப் போன்று,
எக்காலத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தது என்ற நிலையை
படக் காட்சிகளாக எமக்குக் காண்பித்தார்.

இன்று, விஞ்ஞான அறிவு கொண்டு, ஆதியில் மனிதன் வாழ்ந்ததையும் அவன் உடலில் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒரு மிருகம் போன்று, நடமாடிய இடங்களையும், அதன் உணர்வுகள் பதிவானதை கம்ப்யூட்டர் சாதனத்தின் துணை கொண்டு கண்டறிந்து, எலக்ட்ரானிக்காக மாற்றி பதிவாக்குகின்றார்கள்.

இதைப் போன்று இன்னொரு பக்கம், அக்காலத்தில் வாழ்ந்த மிருகங்களின் நிலைகள் எவ்வாறு? அதனுடைய குணம், பலம், என்ன என்பதை, அதனுடைய தொடர் வரிசையில் எலெக்ட்ரானிக்காக மாற்றி, பட வரிசையாகப் பதியும்படிச் செய்கின்றனர்.

மற்றும் அந்த மிருகங்கள் வாழ்ந்த காலத்தில் உணர்வின் இயக்கங்களை அறிந்து, அக்காலங்களில் வாழ்ந்த பகுதிகளில் உள்ளபடி பூமியினைத் தோன்டுகின்றனர்.

முன் காலத்தில் வாழ்ந்த வலுக்கொண்ட மிருகங்களின் எலும்புக் கூடுகள், வலுவாக இருக்கக் காரணம் என்ன? என்பது போன்ற நிலைகளை, விஞ்ஞானத்தின் மூலம் அறிந்து கொள்கின்றனர்.

அதைச் சேமித்து,
எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி,
கம்ப்யூட்டர்களில் அலை வரிசைப்படுத்தி,
அதனுடைய வாழ்க்கையின் தரத்தையும்
அதனுடைய ரூபத்தையும் கண்டுணர்கின்றனர் விஞ்ஞானிகள்.
 
இதனின் உண்மைகளை நமது குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்தினார். மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, ஒவ்வொன்றின் தன்மைகளையும் காண்பித்து, ஒவ்வொன்றின் உண்மையின் தன்மைகளை அறியும்படிச் செய்தார் குருநாதர்.

இன்று, விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும், மனித உறுப்புக்களை மாற்றி அமைத்து மனிதனைக் காத்தாலும், இந்த உடலில் எந்த உணர்வை வளர்த்துக் கொண்டோமோ அதன்வழி கொண்டுதான் இந்த உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின், இன்னொரு உடலைப் பெறுகின்றது. இதை விஞ்ஞானத்தால் தடுக்க முடியவில்லை.

ஆகவே, நீங்கள் அனைவரும் யாம் உபதேசிக்கும் இந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி, அதன் வழியில் வளர்த்துக் கொண்டால், எமக்கு குருநாதர் காட்டிய அனைத்து நிலைகளையும் நீங்கள் நிச்சயம் காண முடியும்.


இந்த உடலுக்குப் பின், ஈஸ்வராய குருதேவரின் ஈர்ப்பு வட்டத்தில் இணையலாம். அழியா ஒளிச் சரீரம் பெறலாம். எமது அருளாசிகள்.