ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2023

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசித்ததைத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்

ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.

1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.

அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,