ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2023

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

யாராவது அதிகமாகத் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களை என்ன… ஏது…? என்று பதிலுக்குக் கேட்டோம் என்றால் அந்த நிலைக்குத் தான் நாம் போகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அதற்கும் மீறி சிலர் விஷத்தன்மையாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள்
2.ஏனென்றால் அவர்கள் உடலில் ஆவிகள் இருக்கும்
3.காரணம்… ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதத்தில் ஆவிகள் புகுந்து தான் இருக்கின்றது.

மனிதப் பிறவிக்கு வருவது என்றாலே… மனிதனை ஒத்த நிலைகள் எந்த ஏக்கத்தில் ஏங்கி இருக்கின்றோமோ… அதற்குத் தகுந்த மாதிரி ஆத்மா உடலில் வந்துவிடும்.

வந்த பின் எனக்குள் என் குணத்தோடு ஒட்டியே இருக்கும். கெட்ட குணமாக இருந்தாலும் நல்ல குணமாக இருந்தாலும் அதைச் சேர்த்து ஓங்கி வளரும். இரண்டு நிலைகள் கொண்டு அதிலேயே நிரந்தரமாக நான் இருப்பேன்.

சந்தர்ப்பத்தில் நாம் தாழ்ந்து… விலகி அல்லது ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றாலும் அது விடாது.
1.கோபத்தை நாம் அதிகமாக எண்ணுகின்றோம் என்றால் கோபமான ஆன்மா எனக்குள் வந்த பின்
2.அந்த இடத்தில் சமாதானமாகப் போக வேண்டும் என்றால் இது விடாது.
3.ஏனென்றால் அந்த எரிச்சலின் தன்மை அது கூட்டி இன்னும் கொஞ்சம் வளர்க்கத் தான் அந்த ஆன்மா பார்க்கும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி செய்யும் போதெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடலிலிருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என் உடலில் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும்படி சொல்கிறோம்.

ஒரு ஐந்து நிமிடம் அவ்வாறு எண்ணினால் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் புனிதம் பெறுகின்றது.

தாய் தந்தையரின் ஆன்மாக்கள் நம் உடலில் இருந்தாலும் கூட சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைக்கின்றது தாய் தந்தையரின் ஆன்மாக்கள் அதுவும் புனிதம் பெறுகிறது.

நீ பேயாய்ப் போ என்று ரிஷி சாபமிடுவதாக்க் குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள். பேயாகப் போ என்று சாபமிட்டவுடன் “எனக்கு ஒரு விமோசனம் இல்லையா…?” என்று கேட்கின்றான்.
1.நீ நல்லவனைத் தீண்டுவாய் அவன் நிழல் படும்
2.அவன் நிழல் பட்டவுடன் நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்..!
3.ரிஷி சொன்னார் என்று இப்படியும் நமக்குக் காட்டி இருக்கின்றார்கள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று தியானம் செய்து கொண்டே இருந்தால் நம் உடலில் இருந்தே அவைகளும் புனிதம் பெறும்.

உதாரணமாக கிணற்றில் விழுந்து இறந்த ஆன்மாவாக இருந்தால் நம்மையும் கிணற்றுப் பக்கம் இழுத்துக் கொண்டு போகும். வீட்டை விட்டு ஓடிப் போன ஆன்மா வந்திருந்தால் நம்மையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விடும்.

சண்டை போடக்கூடிய ஆவியாக இருந்திருந்தால் நம்மைச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்படி செய்யும். அப்பொழுதுதான் அவைகளுக்கு ரசிப்பாக இருக்கும்.

வெறுப்பாவே பேசிப் பழகிய ஆன்மாவாக இருந்தால் யாரைப் பார்த்தாலும் எதை எடுத்தாலும் வெறுப்பாகவே பேசச் சொல்லும். இது போன்று எத்தனையோ ஆன்மாக்கள் இருக்கும்… `நமக்குத் தெரியாமலே…!
1.நாம் தான் அப்படிப் பேசுகிறோம் என்று நினைப்போம்...
2.ஆனால் நம்முடன் இணைந்து அந்த ஆன்மாக்கள் அது இயக்கப்படும் பொழுது நாம் பேசுவதாகவே நாம் எண்ணிக் கொள்வோம்.
3.இதை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி அவசியம் செய்தே ஆக வேண்டும்.

எங்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.அவர்களுக்கும் ஒரு பாவ விமர்சனம் கிடைத்து
2.நமக்கு ஒத்துழைக்கும் நிலையாக நல்லது செய்யக்கூடிய ஆன்மாக்களாக இயங்கும்
3.அதே சமயத்தில் நமக்குள் கெட்டது வராதபடி நாம் தடுக்கவும் முடிகின்றது.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் இவ்வாறு செய்து பழக வேண்டும்.

ஆனால் மந்திரவாதியிடமோ… மந்திரிப்போரிடமோ சென்று தாயத்தைக் கட்டினால் அவன் ஒரு போக்கிரி ஆவியை நமக்குள் திணித்து விடுவான். மூன்று மாதம் நன்றாக இருக்கும். நான்காவது மாதம் பார்த்தோம் என்றால் “இருடா நானும் பார்க்கிறேன்…!” என்று அதுவும் சேர்ந்து வலுவாக இயக்க ஆரம்பிக்கும்.

அதை மீண்டும் மாற்ற இப்படியே அவரிடம் செல்லச் செல்ல மூன்று ஆவி நாலு ஆவி ஐந்து ஆவி ஆறு ஆவி என்று வரிசையிலே ஒவ்வொரு குணத்திற்குத் தகுந்த மாதிரி அதைக் கட்டிக் கொண்டே வருவான்.

கடைசியிலே என்ன ஆகும்…?

தாயத்தைக் கட்டினாலும் கூட உடலிலே கை கால் குடைச்சல் நம்மை விடாது… மேல் வலியும் விடாது. ஏனென்றால்
1.இந்த உணர்வுகள் உள்ளே புகுந்த நிலையில்
2.ஒன்றுக்கொன்று ஏற்றுக் கொள்ளாதபடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
3.ஆனால் ஒன்றுக்கொன்று அடக்கும். மன நிலை வேண்டும் என்றால் ஒத்து இருக்கும்
4.உடலில் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

தாயத்தைக் கட்டிக் கொண்டு வருவோரெல்லாம் மீண்டும் மீண்டும் அதனுடைய வழிக்கே தான் இழுத்துச் செல்லும்.

ஆத்ம சுத்தி செய்து பழகினோம் என்றால் நம் ஆன்மாவும் புனிதம் ஆகின்றது நம் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்களும் புனிதம் பெறுகின்றது.

இதே போன்று கணவன் மனைவிக்குள்ளும் ஆன்மாக்கள் இருக்கும்.
1.அது இரண்டு பேரையும் சேர விடாது
2.பிரியமாக இருப்பார்கள் ஆனால் நெருங்க விடாதபடி இந்த உணர்ச்சியினுடைய நிலைகள் இயக்கி விலக்கி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.இதை நினைத்து இரண்டு பேருமே வேதனைப்படுவார்கள்.

இவ்வாறு இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் நாள் சக்தி என் கணவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி பெற வேண்டும் என்று இருவருமே இப்படித் தூண்டி எங்கே சென்றாலும் இருவருமே இப்படி இந்த உயர்ந்த உணர்வுகளை சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

மனைவி வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் கணவன் வெளியிலே வேலைக்குச் சென்று இருந்தாலும் அங்கிருந்து மனைவியை எண்ணி… என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படி இருவருமே செய்து கொண்டே வர வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் எல்லாம் அனைவரும் மகிழ்ந்திடும் சக்தியாக வர வேண்டும் எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி இருவருமே எண்ண வேண்டும்.

1.இது “சாதாரண சொல்…” என்று நினைக்க வேண்டாம்
2.இருவரையுமே ஒன்றி வாழச் செய்ய மகிழ்ந்து வாழச் செய்ய இது பேருதவியாக அமையும்.