ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2022

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).