ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2022

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

தெருவிலே சாக்கடை இருக்கின்றது... வீட்டிலோ... தொழிலிலோ... “மிகுந்த கஷ்டம்...” என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை எடுத்துச் சாப்பிடும் (நம்மை அறியாமலே).

ஆனால் யாம் சொன்ன முறைப்படி தியானம் அதிகமாக இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்குச் சாக்கடை நாற்றமே பெரும்பகுதி தெரியாது.

1.சாக்கடை அருகிலே இருந்தாலும் கூட... அந்த உணர்வுகளை நுகரவிடாது
2.எடுத்துக் கொண்ட தியானம் அதைத் தடுக்கும்... உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் யாம் பதிவு செய்த ஞான வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

பயிர்களை விவசாயம் செய்யும் போது பார்க்கலாம். புகையிலைக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்... நெல்லுக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்... சோளத்திற்கு என்று ஒரு உரம் போடுகின்றார்கள்.

அதே மாதிரி யாம் கொடுக்கும் ஞான வித்திற்கு “அருள் ஞான உணர்வின் உரத்தை” நீங்கள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஞான வித்தாக” ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களிலே அது படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை உயர்த்தும்.

1.நான் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்... என் வீட்டுக்காரர் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்
2.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்... கடன்காரன் பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்கிறான் என்று இப்படி விட்டு விட்டால் இது சவாரி செய்து விடும்
3.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்... எனக்கு நோய் வந்து விட்டது என்று எண்ணினால்
4.அருள் சக்திகளைப் பெறுவதை விட்டுவிட்டு இதை எடுத்துக் கொள்கின்றீர்கள்
5.கெட்டதற்குத் தான் நீங்கள் சக்தி கொடுக்கின்றீர்கள்... அதையே வளர்க்கிறீர்கள்.

இந்த மாதிரி எண்ணங்கள் எதனால் வருகின்றது...?

உடலில் உள்ள அணுக்களுக்கு அதற்குப் பசி எடுக்கும் பொழுது அது உணர்ச்சியைத் தூண்டி நல்லதை எடுக்க விடாது இப்படித் தடுக்கும்.

அந்த மாதிரித் தடுக்கும் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...? உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சி மூலம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து நல்ல உரமாகக் கொடுத்தால்
2.ஞானத்தை நாம் பெருக்க முடியும்
3.தீமையான உணர்வுகள் உள்ளுக்கே புகாதபடி தடுக்கவும் முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா. இப்படி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஒருவன் போகின்றான்... யாரையோ கோபமாகப் பேசுகின்றான். அதைப் பார்த்தவுடன் நம் நினைவுகள் எப்படி வருகிறது...?

பார்... இந்த மாதிரி நடுரோட்டில் பேசுகின்றானே...! இந்த உணர்வு வந்த பின் உயிரிலே பட்ட பின் நமக்குள்ளும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நாமாக அப்படிச் செய்கின்றோமா...? இல்லை...! அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. ஆகவே இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா...! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இந்த வலுவான நிலைகள் இங்கே ஆனபின்
1.அவன் உணர்வைத் தள்ளி விட்டு விடும்
2.காரணம் இங்கே அடைத்து விடுகின்றோம்
3.துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டுகின்றோம்
4.ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்

துணியில் அழுக்குப்பட்ட பின் சோப்பைப் போடுகின்றோம். நுரை என்ன செய்கின்றது...? அந்த நூலுக்குள் மறைந்துள்ள அழுக்கை அப்புறப்படுத்துகின்றது.

சோப்பு போடாதபடி... என்ன தான் துணியைத் துவைத்தாலும் கூட அழுக்குப் போகாது. இருட்டடித்த மாதிரி தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது.

உப்பைப் போட்டுத் துணிகளை வேக வைத்த பின் அழுக்கை எல்லாம் வெளியேற்றி விடுகின்றது. அது போன்று தான் நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழகுங்கள்.