ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2022

உடலுடன் அல்ல... “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

மனித உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கிறது என்றால் மருத்துவ ரீதியிலே இரத்தத்திலே ஆசிட் ஊற்றிய பின் உடலுக்குள் எந்த அளவு நோய் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது.

அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தநாளங்களில் கலக்கச் செய்தால்
1.நம் உடலில் கோபத்தின் உணர்வுகள் அது எந்த அளவு இருக்கின்றது...? அதை எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெளிவாக்குகின்றது.
2.வெறுப்பு என்ற உணர்வு வரும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அந்தக் கலக்க உணர்வை மாற்றிவிட்டு
3.அதை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று நமக்குத் தெரிய வருகின்றது... தீமையிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்கின்றது.
4.அதை நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற உண்மையின் உணர்வை நாம் அறிய முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அருள் உணர்வுகளைப் பெருக்கிச் சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற முடியும். இந்த வாழ்க்கையில் ஏகாந்த நிலை பெற முடியும்.

ஆகவே எத்தகைய தீமைகள் நம் மீது வந்து மோதினாலும் அதை அகற்றப் பழகுதல் வேண்டும். அருள் உணர்வுகளைப் பெருக்க வேண்டும்... துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக நாம் அமைய வேண்டும்

ஏனென்றால் ஆசையின் நிமித்தம் கொண்டு நமக்குள் பெருக்கிய உணர்வுகள் ஏராளம் ஏராளம் உண்டு. அந்த உணர்வை அடக்க ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் இராமாயணத்தில் கோடிக்கரை என்று காட்டுகின்றார்கள்.

அதாவது... பல உடல்களைக் கொன்று தின்று அதன் உணர்வின் தன்மை கொண்டு எத்தனையோ உடல்களை மாற்றிக் கடைசி நிலையான கோடிக்கரை என்ற இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை அடக்க வேண்டும்.

நம் உடலில் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு. ஒவ்வொன்றும் அது அது தன் உணவுக்காக உந்தும்.

அப்படி உந்தும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவைகளைச் சமப்படுத்தி ஒளியாக மாற்றி அது அனைத்தையும் உயிருடன் ஒன்றாக்கப்படும் பொழுது தனுசுக்கோடி.

இதைத் தெளிவாக்குவதற்காக இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி அதைப் பூஜிக்கத் தொடங்குகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் பொழுது...
1.உணர்வின் தன்மையை நமக்குள் இணைந்து வாழும் தன்மையாக
2.உடலுடன் அல்ல... “உயிரோடு ஒன்றி வாழும் உணர்வின் தன்மையை நாம் சேர்ப்பித்தால்...”
3.அடுத்து நமக்குப் பிறவி இல்லை.

இந்த உடலில் குறுகிய காலம் தான் நாம் வாழ்கின்றோம் என்றாலும் அந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் எதைச் சேர்க்க வேண்டும்...? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.சந்தர்ப்பத்தால் வரும் தீமையான உணர்வுகள் நம்மை அடிமை ஆக்காதபடி
2.அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை நாம் அடிமையாக்கி
3.தீமை நம்மைக் கவர்ந்திடாது விண் செல்லும் நிலை தான் தனுசுக்கோடி.

காரணப்பெயர் வைத்து இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள் எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடையும் வழிகளை.