ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2014

“தீமையை நீக்கக்கூடிய அருள்சக்தியை” கேட்பார் யாரும் இல்லை - ஞானகுரு

தீமையை நீக்கக்கூடிய அருள்சக்தி கொடுங்கள்,
தெளிவாக நாங்கள் வாழவேண்டும்
என்று கேட்பார் யாரும் இல்லை.

நோயைப் போக்கக்கூடிய சக்தி வேண்டும், அந்த அருள்ஞானம் வேண்டும், நாங்கள் அருள் வாழ்க்கை வாழவேண்டும், அதன்படி நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் அந்த ஆசீர்வாதம் கொடுங்கள் என்று வாங்கி, அதைப் பின்பற்றினால், அந்த முறையில் எடுத்தால், உங்கள் நோயை உங்களால் போக்க முடியும்.

நோயை நீக்கிய அந்த உணர்வை நீங்கள் மற்றவருக்குச் சொல்லிப் பாருங்கள். போகிறதா இல்லையா என்று பார்க்கலாம்.

உங்கள் உணர்வை வைத்து, உங்களைக் காக்க முடியும் உங்கள் சொல் செயல் மற்றவர்களையும் காக்கச் செய்யும்.
இதைத்தான் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
இதைத்தான் நான் விரும்புகின்றேன்.

ஆகவே, உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன். இந்த உலகில் எப்படி வாழ்கிறோம்? இனி எப்படி வாழவேண்டும்? இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நம்மை அறியாது வரும் தீமையிலிருந்து நம்மை மீட்டிக்கொள்வதற்கு நமக்குப் பாதுகாப்பு தேவை. அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும் என்ற சக்தியை எல்லோருக்கும் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எல்லோரும் நுகருங்கள். உங்களுக்குள் தீமை புகாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையால் உங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.