ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2014

உடல் ஆசைக்காக உயர்ந்த சக்தியை யாம் உங்களுக்குக் கொடுக்கவில்லை - ஞானகுரு

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை. உணர்வுகள் மாறுகின்றது. உயிர் ஒளியாக உள்ளே இருக்கின்றது. ஆக, இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
அதன் வழி நீங்கள் தியானித்து வந்தால்,
உங்கள் உடலிலிருந்து ஒரு வெளிச்சம் வரும்.

இதைச் சொன்னவுடனே, பழனியிலே ஒருவர் என்ன செய்தார்? கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்தவுடன், கணவர் உடலிலிருந்து, திடீரென்று “பளீர்” என்று வெளிச்சம் வருகின்றது. வீடே வெளிச்சமாகின்றது.

இவர் கண்ணை முழித்துப் பார்த்து, “ஐய்யய்யோ., இந்த ஒளி தெரிகிறதே, என் சந்தோஷம் எல்லாம் என்னை விட்டுப் போய்விடுமே என்று சொல்லிக் கொண்டு அழுகின்றார். உடலிலிருந்து ஒளி வருகிறது, நான் அப்படியே போய்விடுவேனா? என்று அந்த பயம் வந்துவிட்டது.

அவர் மனைவி சொல்கின்றது. பயப்படவேண்டியதில்லை, சாமிதான் சொல்லியிருக்கின்றார் அல்லவா. உடலில் இருந்து வெளிச்சம் வருகின்றது, எனக்கும்தான் தெரிகின்றது.

அந்த அம்மா அப்படிச் சொன்னாலும், கணவர் “எனக்கு எப்படியோ நடுக்கம் வருகின்றது” என்று சொல்கின்றார். ஏனென்றால், வெளிச்சத்தைப் பார்த்து ஆனந்தமாக இருந்தாலும், அதை எண்ணாது இதை எடுத்துக் கொள்கின்றார்.

அப்புறம் நான் அவர்களிடம் விவரத்தைச் சொன்னேன்.

அவருக்குள் சில தத்துவமெல்லாம் தெரிகின்றது. கவிகளையும் மற்றவைகளையும் பாடுகின்றார். இருந்தாலும் அவர் கடைசியில் என்ன செய்துவிட்டார்?

அவர் வட்டிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். இந்தப் பாவமெல்லாம் எனக்கு வந்து சேருமே. அப்புறம் இது என்னாகும்? என்று சொல்லிவிட்டு, இந்த ஒளியின் சரீரம் பெறும் ஆசையையே விட்டுவிட்டார்.

ஒரு மந்திரவாதியிடம் போய், இந்தத் தீய நிலைகள் எல்லாம் வராமல் எனக்குத் தடுக்க வேண்டும் என்று இவர் கேட்கின்றார்.

மந்திரவாதி என்ன சொல்கிறார்? நீ கோழிக் கறியும், சாராயமும் வைத்துச் சாப்பிடு. நான் கொடுக்கும் இந்தத் தாயத்தைக் கட்டிக் கொள் என்கிறார்.

இவர் அவர் சொன்ன மாதிரியே சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அப்புறம் அதற்கும் இதற்கும் போராட்டமாகி, அவருக்குள் இதே உணர்வு கொண்டபின் எதிர் நிலையானபின் நோயாக மாறிவிட்டது.

அவருடைய தாயாரும், மனைவியும் சொல்கிறார்கள். “சாமி எவ்வளவு பெரிய சக்தி கொடுத்துள்ளார், நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்.

“அட., நான் இத்தனையும் அனுபவிப்பதற்கு முன் ஒளியாகிப் போய்விட்டேன் என்றால் என் சுகமெல்லாம் போய்விடுமே” என்று அவர் சொல்கிறார்.

இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஏனென்றால் இது நடந்த நிகழ்ச்சி.

இப்படியும், சிலருக்கு சக்தி கிடைத்தும் அதை எண்ணாது உடல் ஆசை வரப்படும் பொழுது, இந்த மாதிரி எல்லாம் செய்துவிடுகின்றார்கள்.

ஆகவே, இதைப் போன்று இல்லாதபடி நீங்கள் பேரானந்த நிலை என்ற நிலையை அடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உடலுக்குப் பின் நாம் இன்னொரு பிறவி எடுக்கக்கூடாது.
இன்னொரு உடலுக்குள் போகக்கூடாது.