ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2024

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.