ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2024

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் "கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்"

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் "கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்"

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்... நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்...!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்...!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா...! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்...?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்...? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்...” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது...?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நல்ல மனதையும் கெடுப்பதில்லை... நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே... எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்... நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்...
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்...
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது... நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்... எலெக்ட்ரானிக்...! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது... எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி... அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ...
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா...!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்...” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்... என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.