ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2024

உந்து விசை

உந்து விசை

 

பிறவா நிலை அடைந்து விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால் மனித வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் அடைய வேண்டிய எல்லையைச் சீராகச் சென்றடைய முடியும்.

அப்படிச் சீராகச் செல்ல வேண்டும் என்றால் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தல் வேண்டும்.
1.தவறு எங்கிருந்து வந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்படுத்தவும்
2.தவற்றற நிலையைத் தனக்குள் வளர்க்கவும் முடியும்.

அந்தத் தவறற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான் அது முடியும்.

விஞ்ஞானிகள் செலுத்தும் இராக்கெட் விண்ணை நோக்கி எப்படிச் செல்கின்றதோ அதைப் போன்று அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.இந்தப் புவி(யில்) வாழும் வாழ்க்கை நம்மை ஈர்க்காது
2.மெய்யான வாழ்க்கையாக வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மைச் செலுத்தும்… இந்த உயிர்…!

மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் சிக்கலைப் பிளந்து… விண் செல்லும் நிலையாக உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும்.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி அதனின் எல்லையை அடைந்த பின்… உந்தித் தள்ளிய உணர்வின் சத்தைப் பிரித்து (ROCKET STAGES) விடுகின்றது. அதன் பின் அதனுடைய சுழல் வட்டத்திலே செல்கிறது.

அதைப் போன்று இன்று புவியின் ஈர்ப்பிலே இருக்கும் நாம்
1.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்
2.அதனின் “உந்து விசைகள்” நமக்குள் அதிகமாகும் பொழுது அதனின் ஆற்றல் நமக்குள் அதிகமாகின்றது.
3.அந்த ஆற்றலின் துணை கொண்டு ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வைப் பிரித்து விடுகின்றது
4.உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் சுழல் வட்டத்திற்குள் சென்று உணர்வின் தன்மை ஒளியாகச் சுடர்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணுலக ஆற்றலை அறிய… ஆற்றல்மிக்க சாதனங்களை உருவாக்கி விண்ணிலிருந்து அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு… அதனின் சீர் பாதைகளை எந்திரத்தின் துணை கொண்டு காணுகின்றனர்.

இதைப் போன்று உடல் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
1.வரும் தீமைகளைப் பிளக்கும் உணர்வை நாம் உந்து விசையாக ஆக்கி
2.விண்ணுலகம் செல்ல முடியும்… அதற்குத் தான் ஆத்ம சுத்தி…!

ஒவ்வொரு நொடியிலும்… வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நமக்குள் இதை இணைத்திடல் வேண்டும் (ஆத்ம சுத்தி).

ஆகவே… எந்த ஒரு தடையும் இல்லாது அருள் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் சேரச் சேர… அங்கே சென்றடைந்த பின்
1.இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை… அதாவது உடல் பெறும் உணர்வுகளைக் கழற்றி எறிந்துவிடும்.
2.அந்த நிலையைப் பெறுவதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.