ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2024

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

 

எந்த ஒரு சூழ்நிலையிலும்… “ஒருவர் அகால மரணம் அடைந்து விட்டார்…” என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.தனித்து நின்று அவர்களை எண்ணி
2.“ஐயோ இறந்து விட்டாரே… உயிர் போய்விட்டதே ஈஸ்வரா…!”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர் போக வேண்டும் என்று “முந்தி விடாதீர்கள்…”

ஏனென்றால் இப்படி எண்ணினால் அந்த ஆன்மா உங்களுக்குள் வந்து விடும்… இதை மறந்து விடாதீர்கள்…!

அதற்குப் பதிலாக… மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.முதலில்… இந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
2.அதற்குப்பின் அந்த உயிரான ஈசனின்… ஆன்மாவின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வினை இணைத்து…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
4.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்…!

அங்கிருந்து நாம் நகர்ந்து விட வேண்டும்…!

பின் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு ஐந்து பேர் சேர்ந்து மேலே சொன்னபடி செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது.

தனித்த மனிதன் எண்ணி இழுக்கப்படும் போது ஒரு சமயம் ஏமாந்து விட்டால்
1.ஈகையின் நிலைகள் கொண்டு வேதனை கலந்த நிலையில் எண்ணி விட்டால்
2.அந்த ஆன்மா விண் செல்வதற்குப் பதில் நம்முடன் அரவணைத்து விடும்.

ஆகவே கூட்டுத் தியானங்களை அமைத்து ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்து ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுடன் இணைந்து வலுப் பெறும் நிலையாக செயல்படுத்தினால் விண் செலுத்த இது உதவுகின்றது.

மறவாது இப்படிச் செயல்படுத்துங்கள்.

1.எங்கே யார் இறந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற ஏக்கத்துடன் நுகர்ந்து விடாதீர்கள்
2.ஏனென்றால் அந்த ஆன்மாக்கள் நம் பூமிக்குள் ஈர்க்கும் நிலையே வருகிறது… அல்லது நமக்குள்ளே வந்துவிடும்
3.இதிலே பங்கு விகிதாச்சாரம் எவர் அதிகமாக அவரை எண்ணி ஏங்குகின்றாரோ
4.வேதனை உணர்வு கொண்டு சோகம் அதிகமானால் அதனின் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுவர்.
5.அதன் வழி தான் அந்த ஆன்மா மறு பிறவிக்கு வருகின்றது.

அது போன்று இல்லாது கூட்டுத் தியானத்தின் மூலம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து… ஆன்மாக்களை இந்த முறைப்படி விண் செலுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

1.பிறிதொரு ஆன்மா ஒவ்வொருவர் உடலிலும் உண்டு
2.ஆன்மா இல்லாத மனிதரே இல்லை
3.எவ்வழியிலும் ஏதாவது ஒன்று நம் உடலில் ஒரு ஆன்மாவது இருந்துதான் தீரும்.

காரணம் மனிதன்… எதன் மீது பற்று கொள்கின்றானோ அதன் துணை கொண்ட உயிரான்மா உடலுக்குள் வந்துவிடும். எந்த மனிதன் தனக்குள் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டானோ எந்த உடலுக்குள் போனாலும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆனால்… ஆன்மாக்களை நீக்குவதற்கு ஜோதிடம் பார்ப்பதோ கோடங்கி அடிப்பதோ… மந்திரங்கள் எந்திரங்கள் செய்வதோ… முற்படாதீர்கள். அது ஒன்றும் வேலை செய்யாது… கெடுதலைத் தான் தரும்.

உங்கள் உடலுக்குள் கடின நிலைகள் கொண்டு ஆன்மா செயல்பட்டாலும்
1.உடலில் ஆட்டிப் படைக்கும் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் அமைதி கொண்டு நல் வழி காட்டும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆன்மா ஒரு உடலில் இப்படி ஆட்டங்கள் ஆடினால் உள்ளிருந்து இயக்குவதை சப்தரிஷி மண்டலங்களுடன் உங்கள் நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்… அதன் வழி அதை அமைதிப்படுத்துங்கள்… தீமைகள் அகன்றுவிடும்

ஏனென்றால் அதனுடைய உடலில் துடித்த சாப வினைகள் தான் அதற்குக் காரணமாகின்றது. அந்தச் சாப வினைகளை நீக்க இதைப் போன்று நாம் அருள் உணர்வுகளை இணைத்து… ஆத்ம சுத்தி செய்து… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு இந்த எண்ணத்தின் வலுவை உடலில் உள்ள ஆன்மாக்களுக்குப் பாய்ச்சினால் தீமைகள் அகலுகின்றது

ஆகவே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.எத்தனை முறை சொல்கிறீர்களோ
2.அந்த அளவுக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.