ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2022

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால் நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!

 

தியான நிலையின் பொருள் என்னப்பா…? தியானம் செய்வது எதற்காக…?

உணவிற்கோ உடைக்கோ உலக ஆசாபாசத்திற்கோ செய்வது தியானம் அல்ல…! என்று பலர் சொல்வார்கள். மனிதனாகப் பிறந்தவனுக்கு உண்ணும் உணவும் உடுக்க உடையும் ஆசாபாசங்களும் உள்ளது தானப்பா. இந்த உலகில். இந்த உடலையும் பாதுகாக்க வேண்டுமப்பா…!

தியானத்தின் பொருள்
1.இந்த உடலில் நாம் உள்ளவரை “ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்ற ஜெபத்தை
2.உயிரைப் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.
3.அப்படித் தியானித்தால் உன் சுவாச நிலை நல்லதாக மாறிவிடும்.

அந்த நிலையில் உன் எண்ணமெல்லாம் சிதறிவிடாமல் பரிபக்குவமான நிலையில் உயிரான ஈசனை எண்ணும் பொழுது “சுவாச நிலை ஒரு நிலைப்படுகின்றது….!”

சுவாச நிலை ஒரு நிலைப்பட்டவுடன் உன் உயிர் நிலைக்குப் பெரும் உன்னதத் தன்மை வருகின்றது. அந்த நிலையை எய்திவிட்டால் பிறரின் துவேஷமும் எந்தத் தொழிலுக்கும் வேறு எந்த நிலை வந்தாலும் உன் நிலை மாறாது.

உன் நினைவெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உயிருடனே ஒன்றி இருக்க வேண்டும். எந்தத் தீமையான உணர்வும் உன்னை அண்டாது. துன்பங்களும் உன்னை அண்டாது. உன் எண்ணத்தில் உள்ள கோபதாபங்களைக் குறைத்துவிடும்.

1.பிறரின் புகழுக்கு மயங்கிடாதே…!
2.பிறரைப் போற்றுவதையும் விட்டிடப்பா…!
3.விஷமான தன்மை தான் இந்த இரண்டும்.

ஜெப நிலையில் இருந்திட்டால் தோல்வி நிலை எந்த நிலையிலும் அண்டிடாதப்பா…! உன் நிலைக்கு உதயத்தை (தக்க உபாயத்தை) அளித்திடுவான் அந்த ஈஸ்வரனே…! நீ எடுக்கும் ஈஸ்வர தியானத்தினால் ஜெயித்திடலாம் உன் வழிக்கே…! எல்லாமே…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால்
1.நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!
2.உன் நிலையில் வருபவர்களுக்கெல்லாம் வாழ்த்திடப்பா “நலமாக வாழ்வாய்…!” என்ற சொல்லை.
3.வாழ்வாங்கு வாழ்த்துவார்கள் அவர்கள் உன்னை.
4.அவர்கள் வாழ்த்திடும் வாழ்த்து தானப்பா ஈஸ்வரனின் வாழ்த்து…!

ஈசனின் வாழ்த்தையே நீ பெற்றிடுவாய்…!