ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2022

புருவ மத்தியில் எண்ண வேண்டும்

நம்முடைய மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான உணர்வுகள் தாக்கும். அந்த உணர்வுகளெல்லாம் நம்மைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மைக் கோபித்துத் திட்டுகின்றார் என்றால் திட்டுகிறான்… திட்டுகின்றான்.. என்று எண்ணினால் அவன் உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

“அவன் உணர்வை…” வராமல் தடுக்க முடிகின்றதா...!

பிள்ளை மேல் பாசமாக இருக்கின்றோம். அவன் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணினால் அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றதே தவிர அதனால் நாம் வேதனைப்படுகின்றோம்.

ஒருவருக்குப் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம். கொடுத்த பணம் வரவில்லை என்கிற பொழுது அன்றைக்கு உதவி செய்தேன் ஆனால் இன்று ஏமாற்றுகின்றானே…! என்று இந்த உணர்வைத்தான் வளர்க்கின்றோம்.

“இல்லை” என்று சொல்ல முடியுமா...?

ஆகவே இதைப் போல்
1.நம் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் குறைகளைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
2.இதை நீக்கும் உணர்வே வரவில்லை.

ஆறாவது அறிவு கொண்டு நம் உடல் நஞ்சைப் பிளந்த பின் தீமைகளை நீக்கக்கூடிய அறிவின் ஞானம் தீமை என்று தெரிகின்றது. தீமையை நீக்க வேண்டும் அல்லவா…?

அந்தத் தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். அது நமக்கு முன் படர்ந்துள்ளது.

அதை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணினால் அவன் உணர்வு இங்கே சிறுத்து விடுகின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் கலந்து நம் உடலிலுள்ள இரத்தங்களிலே கலக்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் பதட்டமும் பயமும் குறைகின்றது.
2.இந்த அருள் உணர்வுகளை நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் சுவைத்துச் சாப்பிடும்.
3.அருள் ஒளி என்ற உணர்வுகள் இது தெளிவாகும் பொழுது நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தெளிவாகும்.
4.நமக்கு மன வலிமை கிடைக்கின்றது.
5..சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
6..நம் செயலும் ஒரு நல்ல செயலாகச் செய்யும் நிலை வருகின்றது.
7.நம் சொல்லும் பிறரை மகிழச் செய்யும் சக்தியாக அமைகின்றது.
8.நாம் சொல்ல நினைக்கும் உணர்ச்சிகள் நமக்குள் நல்லதாகவும் அமைகின்றது.