ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2021

உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை - ஈஸ்வரபட்டர்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்…! என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை.
1.எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
2.அதன் ஆசை முடியும் வரை
3.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…?

அது சிறிய அணுவாகத்தான் உள்ளது. அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” காற்றிலே பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விடும் சுவாச நிலை என்று சொல்லும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழியே இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால்
1.தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…!
2.அதைத் தவிர வேறு வழி இல்லை.