ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2021

மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்

 

தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.

நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.

தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.

இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.

குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.

ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.

அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.

1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
3.சாமி செய்தார் என்பதற்குப் பதில் சாமி பார்வை பட்டு பிறருடைய தீமைகள் எப்படிப் போனதோ
4.அதே போல் நம் பார்வையால் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்
5.ஒளியான உணர்வுகள் பேரருள் பேரொளியாக வளர வேண்டும்
6.அத்தகைய சக்தியை நாம் பெற வேண்டும்… அது தான் முக்கியம்.