ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2021

என் வழிக்கு நீங்கள் வாருங்கள் - ஈஸ்வரபட்டர்

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.அந்த நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இதிலே தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அந்த ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.