ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2021

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

 

மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்... சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்... பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.

அதே போன்று பலராம்...! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.... கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.

1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்... அது தன்னாலே வரும்... சொல்ல வைக்கும்...!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ... அம்மம்மா...! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது ஈஸ்வரா... என்ற சொல் வரும். உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்திவாய்ந்ததாக உருவாகிறது.

ஆனால் ஈஸ்வரா... என்று வேதனை கலந்த உணர்வை எடுக்கக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்துப் பழக வேண்டும்.

1.இதன் படி செய்தால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும்.
2.உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும்.
3.துன்பத்தை போக்கும் உணர்வுகள் உங்களிலே விளைகின்றது.

துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்...!

யாரோ செய்வார்... எவரோ செய்வார்... என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.

வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.

ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.

1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.