ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2021

உயிர் விண்ணின் அங்கம்… உடல் மண்ணின் அங்கம்... மண்ணாகப் போகும் நிலையை விடுத்து உயிருடன் ஒன்றி ஜோதி நிலை பெறுவோம் - ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது.

யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருப்பதால் அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் உருவாக்கும் சக்தியாக அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே…
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!