ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2021

உங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்

 

டி.வி. ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து வருவதைத் திருப்பி வைத்து நாம் கேட்கின்றோம்.

அதே போல் தான் ஒரு வியாபாரமே செய்கின்றோம் என்றால் அதிலே நிறையப் பேரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்

1.அந்த ஸ்டேஷனைத் திறந்தால் நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களின் நினைவு தான் அதிகமாக வரும்.
3.பாவிப் பயல்... இந்த மாதிரிச் செய்தான்... அதைச் செய்தான்... இதைச் செய்தான் என்ற ஸ்டேஷனைத் தான் நாம் அடிக்கடி திறந்து வைப்போம்.

அதற்குத் தகுந்தாற்போல் பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது செய்திருந்தால் அவர்கள் மீது அந்த நினைவுகள் வரும்.

அடுத்து நம் சொந்த பந்தங்களில் யாராவது ஒரு வித்தியாசமாகச் செயல்பட்டிருந்தால்... குறைபாடுகள் இருந்தால் “நல்லது செய்தாலும் நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்...” என்று அதைப் பற்றிய சிந்தனைகள் வரும்.

இப்படிக் குறைகளைப் பேச ஆரம்பித்தால் அந்தக் குறை... இந்தக் குறை... என்று எல்லாக் குறைகளும் வரிசையில் வந்து கொண்டே இருக்கும். நல்லதை நினைக்கவே வராது...!

கடைசியில் குறையைப் பேசிப் பேசி... என்ன உலகம்... போ...! என்ற இந்த எண்ணம்தான் வரும். இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இருந்தால் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே
1.பாருங்கள்... இந்தப் பையன் மோசமானவன்...! என்று சொல்வோம்.
2.நாம் சொன்னதும் அடுத்து இன்னொருவர் ஆரம்பிப்பார்.
3.கடைசி எல்லாவற்றையும் மோசம்... மோசம்... என்ற சொல்லாக வரிசையில் வரும்.

ஏனென்றால் இந்த உணவின் தொடர் வரிசை இப்படித்தான் வரும்.

நம் வாழ்க்கையில் இது போன்று வர ஆரம்பிக்கும் போதே அடுத்த கணம்... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று உயிரிடம் சொல்லி அவனிடம் வேண்டி அந்தழ் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது நமது உயிர் தான்.

1.தவறு செய்கிறார்கள் என்றால் நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது
2.கண்ணின் கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலில் விளைந்த உணர்வினை இழுத்து நம்மிடம் கொடுக்கின்றது.
4..உயிரிலே பட்ட பின் தவறு செய்கின்றான் என்பதை உணர்த்துகின்றது.

உயிரான காந்தம் என்ன செய்கின்றது...?

ஒரு நாடாவில் விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பதிவு செய்கிறோம். பின் அந்த ஊசியின் பக்கம் சென்ற பின் அதை இழுத்துப் பேசுகின்றது.

முன்பெல்லாம் ஊசியில் உராய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது லேசரை வைத்து முன்னாடி ஓட ஓட அதில் இருக்கும் உணர்வுகளை எடுத்து வெளிப்படுத்துகின்றது. உராய்வதில்லை... நாடாக்கள் தேய்வதில்லை. அந்த லேசர் தான் அந்த ஒலி/ஒளி அலைகளை எடுத்துக் கொடுக்கிறது.

இதைப் போன்றுதான் நாம் சுவாசித்த பின்...
1.நம் உயிர் லேசரைப் போன்று இயக்கி அந்த அலைகள் பாய்ந்த பின் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதும் சர்க்குலேஷன் ஆகின்றது,

அப்பொழுது அதனதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மை வீரியம் அடைகின்றது. அது அது அந்த உணர்வுகளை எடுத்துத் தீமையான அணுக்கள் சாப்பிடுகிறது. அந்த வழிகளில் (உடலில்) அது தெம்பாகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா...?

அந்த நேரத்தில் எந்த நல்லதை எடுத்தாலும் கிடைப்பதில்லை. நல்லது மடங்கப்படும் போது இங்கிருந்து ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.

உடலுக்குள் நல்ல அணுக்கள் இருக்கின்றது. இது அடைபட்ட பின் நல்லது இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது. இப்படி இருந்தால் அதற்குச் சாப்பாடு எப்படிக் கொடுப்பது...?

ஆகவே தான் அதைப் பிளந்து உங்களுக்கு உயர்ந்த சக்தியாகக் கொடுப்பதற்காக ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). சதா அந்த அலைகள் பாய்கிறது.

கொஞ்சம் உங்கள் நினைவுகளைக் கொடுத்தால்...
1.டக்... என்று அந்த அலைகளைப் பிளந்து ஞானிகள் உணர்வுகளை எடுக்க ஆரம்பிக்கும் (OPEN).
2.அப்பொழுது அந்த ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி உங்களுக்குள் சர்க்குலேஷன் வரப்படும்போது தீமைகளைத் துடைத்துவிடும்.
3.நல்ல சிந்தனைகளும் நல்ல நினைவாற்றலும் வரும்.

செய்து பாருங்கள்.