ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2021

நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) உடலில் கரு முட்டையாகி அணுவாக எப்படி உருவாகிறது…? அணுவான பின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…?

 

உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.

1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.

அப்படிக் கருவாகி விட்டால் “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.

1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.

பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.

இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.

இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.

அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.

உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.

முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).

நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.

ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.

இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.

இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.