ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2015

யாரிடம் நான் யாசகம் கேட்கக் கூடாது, யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது

நாம் மனிதனாக இன்றைய உலகில் இருக்கின்றோம். இனி நம் எல்லையை வகுத்துக் கொண்டுதான் இந்த வாழ்க்கையை நடத்த வேண்டும்.

இந்த உலகில் வாழ்ந்தவர்கள் ஏவரேனும் இன்று உடலுடன் வாழ்கின்றார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இந்த உடலை விட்டு அகன்றால் மீண்டும் வேதனைப்படும் இன்னொரு கூட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது.

அதைத்தான் இராமலிங்க அடிகள் சாகாக்கலை என்னும் நிலையைத் தனக்குள் வளர்த்து வேகா நிலையை அடைந்து போகாப்புனல் என்ற நிலையை நாம் பெறவேண்டும் என்றார். அதாவது பிறவியில்லா நிலையை அடையவேண்டும் என்றார்.

சாகாக்கலையைத் தனக்குள் உயர்ந்த ஒளியின் சிகரமாக அதைச் சாகாக்கலையாக மாற்றி, வேகா நிலை பெற்று, போகாப்புனல் இன்னொரு பிறவிக்கு (உடலுக்குள்) போகாத நிலைகள் அடையவேண்டும்.

“அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை” என்றார். ஆக, நான் எண்ணியதையெல்லாம் நீ இயக்குகிறாய். நான் எண்ணியதெல்லாம்
உன்னுடன் ஒளியின் சுடராக
என்றும் நான் நிலைத்திருக்க வேண்டும்.

என்னுடன் என்னில் ஒளியின் தன்மை பிறருக்கு வழி காட்ட வழியறிந்து செயல்படும் உணர்வின் சத்தை அங்கே உணவாக ஊட்ட வேண்டும் அந்த உணர்வின் சத்து கொண்டு நல் உணர்வின் தன்மை அங்கே வளரவேண்டும்.

நான் தான் (ஒளியின் தன்மையை) பிறருக்குக் கொடுக்க வேண்டுமே தவிர
பிறர் தரும் பொருளை
அங்கே அவனுடைய தீமையினுடைய நிலைகளை நான் நுகர்ந்தறிந்து
யாசிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இராமலிங்க அடிகள் சொன்ன பொருள் அதுதான் ஆனால், அந்தப் பொருளை நாம் யாரும் நுகரவில்லை.

“யாரிடம் யாசகம் கேட்பதில்லை.
யாருக்கும் இல்லை என்று சொல்லாது”
நான் கொடுக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகள் சொன்ன உட்பொருளில் இதுதான் அடங்கியுள்ளது.

ஆனால், நம்முடைய நிலைகள் நான் இதைச் செய்தேன், எனக்கு அவன் செய்தானா? நான் இவ்வளவு செய்தேன். எனக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆக, பதில்லுக்கு அடுத்தவர்கள் செய்வதை எதிர்பார்த்தே இருப்பார். அப்பொழுது இங்கே யாசிக்கும் நிலையே வருகிறது.

யாருக்கும் இல்லை என்ற நிலையில் நான் அவர்களுக்கு உயர்ந்த உணர்வின் சத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறச் செய்யும் அறிவின் தன்மை வளர்த்திடல் வேண்டும். அந்தச் சக்திகளை நான் பெறவேண்டும் என்றார் இராமலிங்க அடிகள்.

“அருட்பெரும் ஜோதி நீ” - எதையும் சுடரின் தன்மையாக நான் எடுக்கும் நிலைகள் எனக்குள் ஒளியாக இருந்து நீ உணர்த்துகின்றாய்.
உனக்குள் இருக்கும் ஒளியின் தன்மை
இந்த உணர்வின் சக்தி
என் எண்ணத்தில் வளரவேண்டும்.

என் எண்ணத்தின் நிலைகள் கேட்டுணர்ந்தோர் நிலைகளிலும் அவர்களிலும் இருள் நீங்கி பொருள் கண்டுணரும் அந்த ஜோதியின் தன்மை அவர்கள் அடைய வேண்டும்.

ஒவ்வொருவரும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆக வேண்டும் என்ற நிலையைத்தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அந்த ஞானிகள் காட்டிய அருள் வழி வாழ்வோம். அழியா ஒளி சரீரம் பெறுவோம்.