ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2015

அகஸ்தியன் தன் தாய் தந்தையரை விண்ணுக்கு அழைத்துச் சென்றான் - நாம் எங்கே அழைத்துச் செல்கிறோம்?

இன்று மக்களாக இருக்கும் நாம் நம் தாய் தந்தையரை எப்படி மதிக்கின்றோம்?

குழந்தைகள் தாய் தந்தையரை மதிக்காத நிலைகளில் அவர்களை நரகலோகத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைதான் இன்று உள்ளது. தாய் தந்தையரைக் காக்கும் மக்கள் இல்லாது போய்விட்டது.

தான் எடுத்துக் கொண்ட நிலைகள்,
புழுவாகவோ பூச்சியாகவோ இருந்த நம்மை
மனிதனாக உருவாக்கியது தாய் தந்தைதான்
என்பதை மறக்கும் நிலைகள் வந்துவிட்டது.

தன்னைப் பாதுகாக்க பாம்பை அடித்திருப்பார்கள். பாம்பு அவர்களைத் தீண்டியிருந்தால் பாம்பின் விஷம் தோய்ந்தால் அந்த உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கே செல்லும். ஆனால் பாம்பிடமிருந்து தப்பிக்க பாம்பை அடித்திருப்பார்கள். பாம்பின் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றுவிடும்.

அதைப் போன்று தேளிடமிருந்து தப்பிக்க தேளை அடித்திருப்பார்கள். அந்தத் தேளின் உயிரும் அவர்கள் உடலுக்குள் சென்றுவிடும்.

எறும்புகள் தொல்லை செய்கிறது என்று அதை நசுக்கிக் கொன்றிருப்பார்கள். மூட்டைப் பூச்சி தொல்லை கொடுக்கிறது என்று அதை அடித்துக் கொன்றிருப்பார்கள். அந்த உயிர்களும் அவர் உடலுக்குள் சென்றுவிடும்.

கொசு கடித்து இரத்தத்தைக் குடித்தால் அதை வெறுத்து “கொசு கடிக்கிறது.,, கொசு கடிக்கிறது..,” என்ற உணர்வை நுகர்ந்து அதன்பால் நினைவைச் செலுத்தும்போது அந்த உயிர்கள் எல்லாம் சுவாசத்தின் வழி உள் புகுந்து இரத்தத்திலே கலந்து
தாய் தந்தையரின் உடலில்
மனிதனாக உருவாக்கும் உணர்வுகளை நுகர்ந்து
அதனின் கருத்தன்மை அடைந்து மனிதனாக வருகின்றது.

ஆகவே, இந்த மனிதனாக வரும்போது இந்தத் தாய் நம்மைப் பத்து மாதம் சுமந்து வளர்க்கும் நிலையில் எத்தனையோ சிரமப்படுகின்றது. எத்தனையோ வேதனைகள் படுகின்றது தாய்.

ஆனால், நாம் இதை உணர்கின்றோமா? சிந்தித்துப் பாருங்கள்.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இதையெல்லாம் உணராத நிலைகளில் தான் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மனிதனாகப் பிறந்த பின் வளர்க்கும்போது தெய்வமாக இருந்து காத்தது நம் தாய் தான். அல்லும் பகலும் நம்மைச் சீராட்டித் தாலாட்டி எவ்வளவோ தெளிந்த நிலைகளில் நம்மை வளர்த்துக் கொண்டு வந்தது நம்முடைய தாய் தான்.

நம்மை வளர்த்த இந்தத் தெய்வத்தை மறந்து செயல்படுவோம் என்றால் இது எதற்கு ஒப்பாகும்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று தாய் தான் குருவாக இருந்து வழிகாட்டி
தன் மகன்/மகள் உயர வேண்டும்
பிறருடைய தீமையில் சிக்கக்கூடாது
மகிழ்ச்சியாக அவர்கள் வாழவேண்டும்,
உயர்ந்த பண்புகளை அவர்கள் பெறவேண்டும்,
பரிவு உள்ளவர்களாக மாறவேண்டும் பண்புள்ளவர்களாக வாழவேண்டும்
என்று ஏங்கித் தவித்துத் தன் பிள்ளைகளை உயர்ந்தவர்களாகக் கொண்டு வரும் இந்த நேரத்தில் தாய் தந்தையருக்கு நாம் என்ன காணிக்கை செலுத்துகிறோம்?

ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் தம்மை உருவாக்கிய தாய் தந்தையரை மறந்தால் நாம் எந்த வழியில் செல்வோம்? என்று சிந்தித்தல் வேண்டும். 

“தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி”
என்று நாம் போற்றித் துதிக்கும் அந்த அகஸ்தியன் தன் தாயின் கருவில் இருக்கும்போது பெற்ற சக்தியின் துணை கொண்டுதான் நஞ்சினை வென்றான், அணுவின் ஆற்றலையும் அறிந்தான் அகண்ட அண்டத்தையும் அறிந்தான்.

தன் தாய் தந்தையரையே விண்ணுக்கு அழைத்துச் சென்றான் அகஸ்தியன். அகஸ்தியனின் தாய் தந்தையர், அகஸ்தியனின் மனைவி என நால்வரும் இணைந்த நிலை தான் துருவ நட்சத்திரம்.

நம்மை உருவாக்கிய நம் தாய் தந்தையர் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள், தீமைகள் அனைத்தும் அகல வேண்டும், எங்களுக்காகப் பட்ட துயரங்கள் அனைத்தும் நீங்க வேண்டும, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெறவேண்டும் என்று
ஒவ்வொரு நிமிடமும் தியானிப்பதே
நம் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும்.