ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2015

மனிதனின் கடைசி எல்லை கோடிக்கரை – தீமைகளை வென்றவன் துருவ நட்சத்திரம் – தனுசுகோடி

நான் சாமியைப் (ஞானகுருவை) பார்க்க வந்தேன்.
நேற்று என் உடல் நன்றாக ஆனது. ஆனால்,
இன்று மறுபடியும் சரியில்லாமல் போய்விட்டது என்பார்கள்.

சற்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.
உடல் சரியான பின்பு நோய் உள்ளவர்களையும், வேதனைப்படும் மற்றவர்களையும் பார்த்து அவர்களின் வலியைக் கேட்டறிந்தால் நோய் மீண்டும் வராமலா போகும்?

அவைகளை அவ்வப்பொழுது துடைத்துப் பழகவேண்டும், குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

வீடு கட்டியபின் சுத்தம் செய்யாமல் இருந்தால் சரியாக இருக்குமா? அழுக்கு சேர்ந்து கொண்டேதான் இருக்கும். நேற்று வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தேன், ஆகவே இன்று எதற்காகப் பெருக்க வேண்டும்..? என்றால் சரியாக வருமா?

அதே மாதிரி நேற்று நான் குளித்தேன். இன்று எதற்காகக் குளிக்க வேண்டும்..? என்றால் சரியாக வருமா?

உடலில் அழுக்குப்படுமா படாதா?

நேற்று என் உடைகளை எல்லாம் துவைத்தேன் இன்று எதற்காக மறுபடியும் துவைக்க வேண்டும்..? என்றால் சரியாக வருமா?

உடைகளில் மறுபடியும் அழுக்கு வருமா.., வராதா?

தினசரி உடலை மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம், உடைகளையும் தூய்மைப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றோம்.

இதே போன்று நம் வாழ்க்கையில் சதா வாழ்க்கையே தியானமாக்க வேண்டும். பேரருளைப் பெற துருவ நட்சத்திரத்தை நுகரவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் எண்ணியவுடன்
அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

அதைக் கிடைக்கச் செய்வதற்கே அகஸ்தியனைப் பற்றியும், துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

ஆனால், நீங்கள் இதைப் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.

விவசாயத்தில் (AGRICULTURE) நல்ல வித்துக்களைக் கொடுக்கின்றார்கள். அதைப் பதியவைத்த பின் அந்தந்தக் காலங்களில் இப்படி இப்படிப் பக்குவம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.

அதன்படி செய்தால்தான் நன்றாகப் பயிர் விளையும்.

களைகள் முளைக்கிறது என்றால் அதை முதலில் ஒரு தடவை எடுத்தபின், அடுத்தடுத்து களைகள்” மறுபடியும் வந்தால் என்ன செய்வது?

அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்? களை முளைக்கும்போது எடுக்காமல் விட்டால் என்ன ஆகும்? பயிர் நன்றாக விளையுமா? எல்லாம் பாழாகிப்போகும்.

ஆகவே, சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்கள் நாம் தீமைகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

உங்களுக்குள் உணர்வின் தன்மை தூய்மையாகும்போது இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெறமுடியும்.

மனிதனின் கடைசி எல்லை அதுதான், “கோடிக்கரை”. தீமைகளை வென்றவன் துருவ நட்சத்திரம்.

அதை நுகர்ந்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை வெல்ல வேண்டும். உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும். எமது அருளாசிகள்.