ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2015

தீமைகளை நீக்கிடும் உணர்வாக, தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளாக, தீமைகளை நீக்கிடும் அணுக்களை உங்களுக்குள் உருவாக்குங்கள்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அறியாது ஆசையினால் வரும் தீமைகள் எத்தனையோ. ஆசையினால் மோகம் கொள்வோம், ஆசையினால் கோபப்படுவோம், சஞ்சலப்படுவோம், வேதனைப்படுவோம்.

செயலற்ற நிலைகளாக வரும்போது வேதனையான உணர்வை நுகர நேருகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் மாற்றியமைக்கக்கூடிய தன்மை பெற்றவன்.

ஆக, மழை பெய்யும்போது நாம் குடை பிடிக்கின்றோம். வெயில் அடிக்கும்போதும் குடையைப் பிடித்து நம்மை நாம் காத்துக்கொள்கிறோம்.

அதே சமயத்தில் காற்று அடிக்கும்போது குடையைத் தூக்கி அடித்துவிடும் என்று காற்று வரும்போது நாம் துணியால் மறைக்கும்போது துணி நம்முடன் ஒட்டிக் கொள்கிறது.

அப்பொழுது கண்களிலோ மூச்சுகளிலேயோ தூசியோ மற்ற எதுவும் புகாதபடி தடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் குடையை விரித்தால் என்ன ஆகும்? குடை பறந்து ஓடிவிடும்.

குளிர் காலத்தில் வெப்பத்தை ஊட்டுவதற்காக போர்வையை எடுத்துப் போர்த்திக் கொள்கிறோம்.

இதைப் போலத்தான் மனிதன் தன்னைப் பாதுகாத்திட வாழும் காலத்திற்கோப்ப மாற்றுவது போல
வாழ்க்கையில் வரும் தீமைகளை அருள் ஒளி கொண்டு
இருளை நமக்குள் புகாது தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

அதை நிறுத்துவதற்குத்தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்கு எப்படிப் பதிவு செய்தாரோ ஒவ்வொரு உணர்வுடன் கலந்து மகரிஷிகளின் உணர்வுகளை ஊட்டினாரோ அதைப் போல துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கிறோம்

துருவ நட்சத்திரத்துடன் இணைத்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் உணர்வை இணையச் செய்கின்றோம். அப்பொழுது நீங்கள் அதைக் கவர்ந்தால் உங்கள் உடலில் வரும் இருளை மாய்க்கச் செய்யும்.

அக உணர்வை ஒளியாக மாற்றிடும் அறிந்துணர்ந்து செயல்படும் உணர்வுகள் உங்களிலே விளைய வேண்டும் என்றுதான் உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்.

ஏனென்றால், இனி வரும் காலங்களில்
வரும் இன்னல்களிலிருந்து மாற்றிட
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து
தீமையான உணர்வுகள் வராதபடி
ஒவ்வொரு நொடியிலும் உங்கள் எண்ணங்களைச் செலுத்தி
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்தீர்கள் என்றால்
தெய்வ ஆணையாக உங்களுக்குள் ஊடுருவி
தீமைகள் புகாதபடி தூய்மையாக்கிக் கொண்டேயிருக்கும்.

தீமைகளை நீக்கிடும் உணர்வாக
தீமைகளை நீக்கிடும் உணர்ச்சியாக
தீமைகளை நீக்கிடும் அணுக்களாக உருவாக்கும் தன்மை பெற்று
தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.

ஆகவே, நாம் இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.