ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2015

கண்ணுக்குத் தெரியும் உடலைத்தான் மதிக்கின்றோம் - கண்ணுக்குத் தெரியாததால் உயிரை (உள் நின்று இயக்கும் ஆண்டவனை) மதிப்பதே இல்லை

இன்று உங்கள் உடலை மதிக்கின்றீர்கள்;
உங்கள் உயிரை மதிக்கவில்லை.
ஏனென்றால், நாம் வேதனைப்படும் உணர்வுகள் உயிருக்குள் படும் பொழுது வேதனை உணர்ச்சிகளை அது படுகின்றது.

அது தாங்காது அந்த உணர்வின் தன்மை நம் உடல் முழுவதும் பரப்புகின்றது. உடலுக்குள் நல்ல உணர்வுகள் அனைத்தும் வேதனையால் துடிக்கின்றது.

ஆக நாம் வேதனைப்படும் இந்த நிலைகள் நாம் அவனுக்குச் (உயிருக்கு) செய்யும் தீங்கு அது நம் உடல் முழுவதற்குமே பரவுகின்றது.

ஆனால் நம்மை அறியாது நம் உயிர் மேல் பட்ட அழுக்கைத் துடைக்க அவனிடமே வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

இந்த முறை தான் அன்று வியசகர் கொடுத்த தெளிந்த உணர்வின் நிலைகள் இது. இதைப் பின்பற்றி ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தில் இதைப்போலச் செய்யுங்கள்.

நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.

அந்த ஆற்றல்மிக்க ஞானியின் அருள் உணர்வுகளை நாம் பெற நமது மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அந்த உணர்வைச் சக்தி வாய்ந்ததாக மாற்றும் பொழுது உங்கள் நினைவின் எண்ண அலைகள் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குள் துரித நிலைகளில் செல்லும்.

இதைப்போல மூதாதையர்களை நாம் விண் செலுத்த வேண்டும். நம் குழந்தைகளையும் நம்மைச் சார்ந்தவகளையும் மூதாதையர்களை விண் செலுத்த நாம் இதைப்போல பக்குவப்படுத்த வேண்டும்.

ஆகவே, இன்றைய விஞ்ஞான உலகில் நம் உணர்வின் தன்மை அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த விண்ணின் ஆற்றலை எந்த நிமிடமானாலும் பெற்று மெய்ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்துங்கள்.

மெய்ஞானிகளின் உணர்வைச் செலுத்தி மெய் ஒளி கண்டுணர்ந்து அந்த உணர்வின் சக்தியாக நம்முடைய உணர்வுகளை மாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு
உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும்
உயிரான ஈசனிடம் வேண்டி அதைப் பருகுங்கள்.
அதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்.
அந்த ஒளியின் சிகரமாக நீங்கள் என்றும் நிலைத்திருக்க முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அருள் ஞானிகளினுடைய சக்திகளை நீங்கள் பெற்று உங்களுக்குள் அறியாது வரும் தீமைகளை நீக்கிடும் எண்ண வலு உங்களுக்குள் பிறக்க வேண்டும்.

அந்த அருள்ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் வளர வேண்டும்.
அந்த அரும் பெரும் சத்து உங்களுக்குள் வளர வேண்டும்.
உங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
நீங்கள் மெய்ப்பொருள் கண்டுணரவேண்டும்.
அந்த உணர்வுகளனைத்தும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும்.
அதை நுகர்வோர் உணர்வுகள் அனைத்திலும் இருள் நீங்க வேண்டும்.

இன்று பரமாத்வாவில் கலந்திருக்கும் இருள் சூழ்ந்த உணர்வுகளின் நிலைகள் அதனுடைய சக்தியை இழக்க வேண்டும். மெய் உணர்வினைக் கண்டுணரும் உங்கள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்.

மெய் உணர்வை வளர்த்திடும் இந்த நிலைகள் இந்த பூமியிலே படர வேண்டும் என்றுதான் உங்களை எண்ணி நமது குரு காட்டிய நிலைகள் கொண்டு உங்களை நான் பிரார்த்திக்கின்றேன்.

சதா என்னுடைய தியானம் அது தான்.

இதைப்போல நீங்கள் ஒவ்வொருவரும் செய்தீர்கள் என்றால் உங்களுக்குள் கோடான கோடி உணர்வுகள் இருப்பினும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு உங்கள் உடலுக்குள் அதைத் தீமையற்றதாக மாற்ற முடியும்.

அதே உணர்வினுடைய அலைகளை நாம் அனுப்பும் பொழுது தீமையற்ற செயல்களைச் செய்யச் செய்து மனிதனென்ற உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றிய என்றும் வேகா நிலைகள் பெறமுடியும்.

உயிருடன் ஒன்றி வேகாக்கலை என்ற உணர்வின் தன்மை கொண்டு
உயிருடன் ஒன்றிய ஒரே நிலையாக நாம் என்றும்
அவனுடன் ஒன்றிய நிலைகள்
அவனாக நாம் வாழ்வோம்
என்ற இந்த தன்னம்பிக்கையில் நீங்கள் செய்வீர்களென்று உங்களை நான் பிரார்த்திக்கின்றேன்.

யாம் சொல்வதை ஏதோ கதை கேட்டுவிட்டுச் சென்ற மாதிரி சென்று விடாதீர்கள். உங்களுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளினுடைய நிலைகள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

நிலத்தைப் பண்படுத்தி அதற்குள் நல்ல வித்துக்களை இட்டு அதற்கு நீரை ஊற்றி களைகளை நீக்கி அதை ஒவ்வொரு நிமிடமும் பேணிக் காக்கின்றோம்

இதைப்போல இப்பொழுது உங்களுக்குள் மனதை பண்படுத்தி அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம்.

பதிவு செய்த வித்து அருள் ஞானமான சத்துக்களை ஒவ்வொரு நொடியிலும் விண்ணிலிருந்து எடுத்து உங்களுக்குள் வளரத் தொடங்கும்

அப்படி வளர்ந்து களை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் சக்தியை நீங்கள் பெற்று உங்களை அறியாத தீமைகளை அகற்றி அந்தத் தீமைகள் அற்ற நிலையாக மகிழ்ந்திடும் உணர்வாக உங்களுக்குள் விளையச் செய்யவே இதை உபதேசிக்கின்றோம்.

ஆகையினால் இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் இதைப்போல ஒவ்வொரு நாளும் பின்பற்றி அதைப்பெற வேண்டும் என்று உங்களை நான் தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் ஈசனிடம் இதையெல்லாம் வேண்டி இந்த உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது
இந்த உணர்வின் இயக்கமாகவே நம்மை இயக்கி
அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பரவச் செய்து
அதனையே ஜீவனாக்கி அதனின் உடலாக நமக்குள் ஆகி
அந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கச் செய்து
இதன் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் உயிருக்குள் உங்கள் உடலுக்குள் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகினால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே, நீங்கள் அந்த நிலையை நாங்கள் பெறவேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டி தியானியுங்கள். அந்த உணர்வின் ஆற்றலைப் பெற அவன் உங்களுக்கு வழி காட்டுவான்.
இருளை நீக்கிடும் உணர்வின் தன்மையை வளர்ப்பான்.
நரசிம்ம அவதாரமாக உங்களுக்குள் அறியாது வரும்
இருள் சூழும் நிலைகளைப் பிளப்பான்.

உயிர் என்றும் நமக்குள் உணர்வின் ஒளியாக நின்று இருளைப் பிளந்து பொருள் காணும் நிலையாக நமக்குள் நிலைத்து நின்று உயிருடன் நாம் என்றும் நிலைத்திருக்க முடியும் என்ற தன்னம்பிக்கையில்தான் நான் உங்களிடம் உபதேசிக்கின்றேன்.

நீங்கள் எல்லோரும் இதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.