ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2015

தொலைந்து போடா...! தொலைந்து போகிறவனே..! என்றெல்லாம் திட்டுகின்றோம் - அதனின் விளைவைப் பற்றித் தெரிந்திருக்கின்றோமா...?

உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் சாபமிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் உற்றுப் பார்க்கிறீர்கள். உங்களுக்குள் அது பதிவாகிறது.

பதிவான உணர்வுகள் என்ன செய்யும் தெரியுமா?

அவர் சாபமிட்ட உணர்வு உங்களுக்குள் நினைவுக்கு வந்தவுடனே எதெது கெட்டுப்போகவேண்டுமோ அந்த நினைவில் நீங்கள் கெட்டுப் போகக்கூடிய பேச்சுதான் வரும்.

நீங்களும் அவன் கெட்டு போகவேண்டும்; தொலைந்து போக வேண்டும் என்று பிள்ளையையே சாபமிட ஆரம்பித்து விடுவீர்கள். ஏதாவது சொன்னபடி கேட்கவில்லையென்றால் என்ன சொல்வீர்கள்?

“தொலைந்து போகின்றவனே,
ஏன்டா இந்த மாதிரிச் செய்கிறாய்..,”
என்று பெண்கள் இதைச் சர்வ சாதாரணமாகச் சொல்வார்கள்.

குடும்பத்தில் எல்லோரும் பாசமாக இருப்பார்கள். இப்பொழுது கொஞ்சம் இதுபோல் மற்றவர் சாபமிடுவது அனைத்தையும் கேட்டிருப்பார்கள். மாமியாரோ பக்கத்து வீட்டுக்காரரோ யாராவதோ சொல்லிக் கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வு வந்தவுடன் தன் பிள்ளையையே தொலைந்து போ.., என்றும் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கின்றாய் தொலைந்து போடா.., என்று சொல்வார்கள்.

அப்புறம் இரண்டு நாளைக்குப் பிறகு “அய்யய்யோ..,” என்று அழுது கொண்டிருப்பார்கள். பாசம் இருக்கின்றது; இதையும் சொல்வார்கள்; இப்படி இருக்கின்றது.

இந்த உணர்வு என்ன செய்கின்றது? எது பட்டதோ அந்த உணர்வின் செயலாக இருக்கின்றது. நமக்குத் தெரியாமலேயே நம்மை இது இயக்குகின்றது, நாம், யார் என்ன செய்வது?

இது இயற்கையில் வருகின்றது, இதைத் துடைக்க வேண்டுமா.., இல்லையா?

அதற்குத்தான், தீமையான உணர்வுகளை நுகர்ந்தால் அடுத்த கணமே தீமைகளை வென்ற உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிரான ஈசனிடம் வேண்டி நாம் சுவாசிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சுவாசித்து உள்முகமாக நம் உடலுக்குள் செலுத்தி இரத்தங்கள் முழுவதும் படரச் செய்து தீமைகளை நாம் துடைக்க வேண்டும்.

மனிதனான பின் நம் உயிருடன் ஒன்றி நாம் ஒளியாகவும் ஆக வேண்டும்.